அடுத்த வருட ஐபிஎல் தொடரில் புதிதாக இணையவுள்ள இரண்டு அணிகளில் ஒன்றான லக்னோ அணியின் கேப்டனாக கே.எல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்
எதிர்வரும் ஐபிஎல் 2022 சீசனில் பத்து அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன. மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் புதிதாக இணைந்துள்ள அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் நாளை (ஜனவரி 22) தங்கள் அணி சார்பில் தக்க வைத்துள்ள வீரர்களின் விவரத்தை ஐபிஎல் நிர்வாகக் குழுவிடம் சமர்பிக்க உள்ளன.
இந்தநிலையில், அடுத்த வருட ஐபிஎல் தொடரில் புதிதாக இணையவுள்ள லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்து இன்று அறிவித்தது.
இதில் லக்னோ அணி, தனது அணியின் கேப்டனாக கே.எல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. லக்னோ அணிக்காக கே.எல் ராகுல் 17 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அதே போல் ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டரான மார்கஸ் ஸ்டோய்னிஸை 9.2 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது லக்னோ அணி, அடுத்ததாக ரவி பிஸ்னோயை 4 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த மூன்று வீரர்களுக்காக 32 கோடி ரூபாயை செலவு செய்துள்ள லக்னோ எஞ்சியுள்ள 58 கோடி ரூபாயுடன் மெகா ஏலத்தில் கலந்து கொள்ள உள்ளது.