நல்ல மனுசன்யா நீ… கிடைத்த மொத்த பணத்தையும் மைதான ஊழியர்களுக்கு கொடுத்த முகமது சிராஜ்
ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டியில் ஆட்டநாயகன் விருதுடன் பரிசாக கிடைத்த பணத்தையும், போட்டி நடைபெற்ற மைதானத்தின் ஊழியர்களுக்கு முகமது சிராஜ் வழங்கியுள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சாம்பியனை தீர்மானிக்கும் இறுதி போட்டி இலங்கையின் கொழும்பில் நடைபெற்றது.
இந்தியா இலங்கை இடையேயான இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
கெத்தாக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இலங்கை அணி, முகமது சிராஜின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வெறும் 50 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், பும்ராஹ் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதன்பின் 51 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு இஷான் கிஷனும், சுப்மன் கில்லும் துவக்க வீரர்களாக களமிறங்கினர். எவ்வித டென்ஷனும் இல்லாமல் ஈசியான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்த ஜோடி 6.1 ஓவரிலேயே இலக்கையும் இலகுவாக எட்டியது. இதன் மூலம் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, ஆசிய கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தையும் வென்றது.
இந்த போட்டியில் 6 விக்கெட் கைப்பற்றிய முகமது சிராஜ், போட்டியின் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
ஆட்டநாயகன் விருது வென்றபிறகு பேசிய முகமது சிராஜ், விருதுடன் பரிசாக கிடைத்த மொத்த பணத்தையும் மைதான ஊழியர்களுக்கு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய முகமது சிராஜ், “நான் கடந்த சில மாதங்களாகவே பந்துவீச்சில் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறேன். கடந்த போட்டிகளில் பந்து அவ்வளவாக ஸ்விங் ஆகவில்லை, ஆனால் இந்த போட்டியில் என்னால் பந்தை ஸ்விங் செய்ய முடிந்தது. இது எனது மிக சிறந்த பந்துவீச்சாகும். ஆட்டநாயகன் விருது மூலம் கிடைத்துள்ள இந்த பரிசுத்தொகை முழுவதும் மைதானம் ஊழியர்களுக்கு கொடுக்கப்படும். அவர்கள் இல்லை என்றால் இந்த தொடர் முழுமையாக நடைபெற்றிருக்காது” என்று தெரிவித்தார்.