பாகிஸ்தான் போட்டியை விட நான் காத்திருப்பது இதற்கு தான்; விராட் கோலி ஓபன் டாக்
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 1 லட்சம் ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடுவதற்கு மிகுந்த ஆவலுடன் காத்திருப்பதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.
டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கியது. இந்த தொடரின் சூப்பர் 12 சுற்று இன்று துவங்கியது. இதில் முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது.
இந்திய அணி நாளை (23-10-22) நடைபெறும் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. கடந்த டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியை எதிர்கொண்ட இந்திய அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி, முக்கியமான இரண்டாவது போட்டியில் தோல்வியடைந்து இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இழந்து வெளியேறியது. இதனால் நடப்பு டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலாவது பாகிஸ்தானிற்கு இந்திய அணி சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.

இந்தநிலையில், இந்த போட்டி குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி, 1 லட்சம் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவதற்கு மிகுந்த ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து கோலி பேசுகையில், “பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி எப்பொழுது சவாலானது தான், ஆனால் இந்த முறை பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி என்பதை விட 1 லட்சம் ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாட உள்ளதே எனக்கு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த போட்டிக்காக மிகுந்த ஆவலுடன் காத்துள்ளேன். இதற்கு முன் ஈடன் கார்டன் மைதானத்தில் ஏறத்தாழ 90,000 ரசிகர்களுக்கு முன்னாள் விளையாடிய அனுபவம் எனக்கு உள்ளது. அந்த போட்டியை என்னால் மறக்க முடியாது. நான் களத்திற்குள் சென்ற போது சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், கபில் தேவ் போன்ற ஜாம்பவான்கள் அனைவரும் இருந்தனர், அந்த அனுபவத்தை என்னால் எப்பொழுதும் மறக்க முடியாது. அதே ஆவலுடன் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்காகவும் நான் காத்துள்ளேன்” என்று தெரிவித்தார்.