மோசமாக விளையாடிய போதும் எனக்கு ஆதரவு கொடுத்தவர் இவர் மட்டும் தான் ; இஷாந்த் சர்மா ஓபன் டாக்
இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா, தனது கிரிக்கெட் அனுபவம் குறித்து பல்வேறு விசயங்களை ஓபனாக பேசியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா, கடந்த 2007ம் ஆண்டில் இருந்து இந்திய அணியில் ஜொலித்து வருகிறார். அணியில் இருந்து பல முறை நீக்கப்பட்ட போதும் தனது கடின உழைப்பு மற்றும் முயற்சியின் மூலம் இன்று வரை இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக இஷாந்த் சர்மா திகழ்ந்து வருகிறார்.
டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி வரும் இஷாந்த் சர்மா, கடந்த மூன்று வருடத்திற்கும் மேலாக ஒருநாள், டி.20 போட்டிகளில் இடம் கிடைக்கவில்லை.
இந்தநிலையில், சமீபத்தில் இஷாந்த் சர்மா அளித்த பேட்டி ஒன்றில், தனது ஆரம்ப காலத்தில் தோனி தனக்கு மிகுந்த ஆதரவு கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து இஷாந்த் சர்மா கூறியதாவது;
கடந்த மூன்று வருடத்திற்கும் மேலாக இந்திய ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், மீண்டும் இடம்பிடிக்க நான் கடுமையாக போராடி வருகிறேன். உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் என்ற ஆசை யாருக்கு தான் இல்லாமல் இருக்கும். எனக்கு முன்னாள் கேப்டன் தோனி மிகவும் ஆதரவாக இருந்துள்ளார். எனக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்ய போகிறேன் என தோனி ஒருமுறை கூட என்னிடம் கூறியது கிடையாது. எனக்கு ஸ்ட்ரைக் ரேட், பவுலிங் ஆவரேஜ் குறித்தெல்லாம் இப்பொழுதும் கூட சரியாக தெரியாது, அணியின் கேப்டன்களுக்கு என்ன தேவையோ அதை சரியாக செய்து கொடுக்க என்னால் முயன்ற வரை முயற்சிப்பேன். கேப்டன்களின் பேச்சை தட்டாமல் கேட்டதன் காரணமாகவே தோனியின் ஆதரவு எனக்கு நீண்ட காலம் கிடைத்தது, என்னை அடுத்த கட்டத்திற்கும் எடுத்து சென்றது” என தெரிவித்துள்ளார்.