ஓய்வு குறித்து தோனி சொல்வது என்ன..? ரகசியத்தை வெளியிட்ட தோனியின் நண்பர்
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப்பெறுவது குறித்துக் கேட்டால் தோனி கோபப்படுகிறார் என்று அவரது நெருங்கிய நண்பர் தெரிவித்துள்ளார்.
38 வயதான மகேந்திர சிங் தோனி உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவில்லை. அதனால், அவர் அடுத்ததாக எந்தப் போட்டியில் விளையாடப் போகிறார் என்று அவரது ரசிகர்கள் ஏக்கத்தில் உள்ளனர். ஐபிஎல் போட்டிகளிலாவது அவர் விளையாடுவார் என்று பார்த்தால் அதுவும் தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்தாண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் தோனிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், வீரேந்திர சேவாக், கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே ஆகியோர், தோனி மீண்டும் அணிக்குத் திரும்ப வாய்ப்பில்லை என்றே கருத்துகளைத் தெரிவித்தனர்.
ஆனால் இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாஃபரும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளரான பிராட் ஹாக்கும், தோனி இப்போதைக்கு ஓய்வுப்பெறமாட்டார் என்று அவருக்கு ஆதரவான கருத்துகளையே தெரிவித்து வந்தனர். இந்திய ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு கே.எல்.ராகுல் நியூசிலாந்து போட்டியின்போது சிறப்பாகச் செயல்பட்டார். எனவே, ரிஷப் பண்ட்க்கு கூட நியூசிலாந்து தொடரின்போது போதிய வாய்ப்பு வழங்கப்படவில்லை. டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டும் பன்ட் சிறப்பாக விளையாடவில்லை.
இதனால் தோனிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டாலும் அணியில் அவரை எந்த இடத்தில் களம் இறக்குவீர்கள் என்று வீரேந்திர சேவாக் கேள்வி எழுப்பியிருந்தார். தோனி இந்திய அணியில் மீண்டும் இடம்பெறுவது கடினம் என்ற சூழலில், அவரது நண்பர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். அதில் “ஓய்வு குறித்து தோனியிடம் கேட்டால் அவர் கோபப்படுகிறார். இந்தியாவில் இப்போதும் அவர்தான் மிக வேகமான விக்கெட் கீப்பர் என்று அவர் நம்புகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.