பொங்கல் தினத்தன்று தமிழர்களுக்கு பெருமை சேர்த்த நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் !
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி ஜனவரி 15ம் தேதியிலிருந்து பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிஸ்சில் அனைத்து விக்கெட்களை இழந்து 369 ரன்கள் குவித்துள்ளனர். இதில் லபுசாக்னே 108, பெய்ன் 50, கிரீன் 47 மற்றும் வேட் 45 ரன்கள் விளாசியுள்ளனர்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 336 ரன்கள் குவித்துள்ளனர். இதில் ரோதித் 44, மயங்க் அகர்வால் 38, ரஹானே 37, சுந்தர் 62 மற்றும் ஷர்துல் தாகூர் 67 ரன்கள் விளாசி இருக்கின்றனர். இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி மூன்றாவது நாள் முடிவில் 6 ஓவர்கள் மட்டும் வீசி 21 ரன்கள் குவித்தது. இதில் வார்னர் 20 ரன்களும் ஹாரிஸ் 1 ரன்னும் குவித்து ஆட்டமிழக்காமல் இருக்கின்றனர்.
இந்நிலையில், இந்த போட்டியின் மூலம் தனது டெஸ்ட் வாழக்கையை தொடங்கும் இரண்டு தமிழக வீரர்களான டி நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 3 முக்கிய விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர். இதில் டி நடராஜன் 24.3 ஓவர்களை வீசி 78 ரன்கள் விட்டு கொடுத்து லபுசாக்னே, வேட் மற்றும் ஹசில்வுட் ஆகியோரின் மூன்று விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். நடராஜனின் சிறப்பான பந்து வீச்சால் சதம் விளாசிய லபுசாக்னேவின் விக்கெட் வீழ்ந்தது.
இதையடுத்து மற்றொரு தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் 31 ஓவர்களை வீசி 89 ரன்கள் மட்டும் விட்டு கொடுத்து ஸ்டீவ் ஸ்மித், கேமரூன் கரீன் மற்றும் நாதன் லையன் ஆகியோரின் மூன்று விக்கெட்டை வீழத்தி இருக்கிறார். சுந்தர் தனது சிறப்பான பந்துவீச்சால் ஸ்மித் மற்றும் கிரீன் ஆகிய இருவரையும் அரைசதம் அடிக்காமல் தடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து சர்துல் தாகூரும் 3 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் தனது அறிமுக டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிஸ்சிலே மூன்று விக்கெட்களை வீழ்த்தியதால் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி தமிழக வீரர்களான இவர்கள் இரண்டு பேரும் பொங்கல் பண்டிகை அன்று டெஸ்ட் போட்டியில் இடம்பெற்றது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருந்தது. மேலும் இவர்கள் தலா மூன்று விக்கெட்களை வீழ்த்தியது பொங்கல் ஸ்பெஷலாக இருக்கிறது. மேலும் இன்று நடைபெற்ற போட்டியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அறிமுக போட்டியில் அரைசதம்(62) விளாசியதையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.