டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலியாவை அடித்து விரட்டி முன்னேறியது நியூசிலாந்து
சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கான ஐ.சி.சி.,யின் தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூசிலாந்துடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.
இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் நியூசிலாந்து அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றும் இரண்டு போட்டிகள் டிராவில் முடிந்திருந்த நிலையில் இரு அணிகள் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி கிறிஸ்செட்டரில் நடைபெற்றது. பரபரப்பான இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் டிம் சோதியின் பொறுமையான ஆட்டம் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்நிலையில் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி., இன்று வெளியிட்டுள்ளது.
அதில் நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவை பின்னுக்குத்தள்ளி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடத்திலும், தென் ஆப்ரிக்கா அணி இரண்டாவது இடத்திலும் நீடிக்கிறது.
தொடரை வென்ற நியூசிலாந்து;
இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 307 ரன்களும், நியூசிலாந்து 278 ரன்களும் சேர்த்தன. 29 ரன்கள் முன்னிலையில் ஆடிய இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 352 ரன் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. இதனால் நியூசிலாந்து வெற்றிக்கு 382 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்த இலக்குடன் ஆடிய நியூசிலாந்து நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 42 ரன் எடுத்து இருந்தது.
நேற்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. வெற்றிக்கு மேலும் 340 ரன் தேவை, கைவசம் 10 விக்கெட் என்ற நிலையில் நியூசிலாந்து தொடர்ந்து விளையாடியது.
ஆனால், இங்கிலாந்து வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் நியூசிலாந்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. 219 ரன்னில் 7 விக்கெட்டை இழந்தது. தொடக்க வீரர் லாதம் 83 ரன்னும், கிராண்ட்ஹோம் 45 ரன்னும் எடுத்தனர்.
முன்னணி வீரர்கள் வெளியேறிய நிலையில் சோதி மட்டும் நிலைத்து நின்று ஆடினார். அவரது விக்கெட்டை மட்டும் எப்படியாவது எடுத்து விட வேண்டும் என்று இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் கடுமையாக போராடினர். ஆனால் அவர்களது முயற்சி பலன் அளிக்கவில்லை. 5-ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் சேர்த்தது. இதனால் போட்டி டிராவில் முடிந்தது. சோதி 168 பந்துகளை சந்தித்து 56 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் பிராட், மார்க்வுட், ஜேக் லிச் தலா 2 விக்கெட் எடுத்தனர்.