இந்தியா அடிச்ச அடி அப்படி… இலங்கைக்கு எதிரான பாகிஸ்தானின் தோல்விக்கும் இந்திய அணி தான் காரணம்; முன்னாள் பாகிஸ்தான் வீரர் சொல்கிறார்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி நூழிலையில் தோல்வியடைந்ததற்கான காரணம் குறித்தான தனது கருத்தை முன்னாள் பாகிஸ்தான் வீரரான ரமீஸ் ராஜா ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆசிய கண்டத்தின் சாம்பியனை தீர்மானிக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ள அணிகளில் பாகிஸ்தான் அணியே முதன்மையானதாக பார்க்கப்பட்டது. பந்துவீச்சில் மற்ற அணிகளை விட பலம் வாய்ந்த அணியாக பாகிஸ்தான் அணியே பார்க்கப்பட்டது. இதன் காரணமாகவே பாகிஸ்தான் அணியே சாம்பியன் பட்டம் வெல்லும் என பலரும் கருதினர். ஆனால் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் மிக மோசமாக செயல்பட்ட பாகிஸ்தான் அணி இதன் மூலம் 228 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
இந்திய அணிக்கு எதிரான இந்த படுதோல்வியின் மூலம், இலங்கை அணிக்கு எதிரான தனது கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதி போட்டிக்கு செல்ல முடியும் என்ற இக்கட்டான நிலையை பாகிஸ்தான் அணி சந்தித்தது.
இலங்கை அணிக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியிலும் பேட்டிங்கில் சொதப்பிய பாகிஸ்தான் அணி, பந்துவீச்சில் ஓரளவிற்கு சிறப்பாக செயல்பட்டு போட்டியை கடைசி பந்து வரை எடுத்து சென்றாலும், இலங்கை வீரரான அஸலன்காவின் பொறுப்பான பேட்டிங்கின் மூலமும், பாபர் அசாமின் மோசமான கேப்டன்சி மூலமும் கடைசி பந்தில் தோல்வியடைந்து ஆசிய கோப்பை தொடரில் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இழந்து வெளியேறியது.
ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் இந்த தோல்வி கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையே ஏற்படுத்தியுள்ளதால் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் பாகிஸ்தான் அணியின் இந்த தோல்வி குறித்தான தங்களது கருத்துக்களை ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், முன்னாள் பாகிஸ்தான் வீரரான ரமீஸ் ராஜாவும் ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் தோல்வி குறித்தான தனது கருத்தை ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து ரமீஸ் ராஜா பேசுகையில், “இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 228 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. இந்திய அணிக்கு எதிரான தோல்வி பாகிஸ்தான் வீரர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் கலைத்துவிட்டது, இதுவே இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கான காரணமாக நான் பார்க்கிறேன். இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியின் விளையாட்டில் ஒரு பயம் தெரிந்தது. அவர்கள் அதிக பயத்துடனே விளையாடினர்” என்று தெரிவித்தார்.