இப்படி ஒரு வாய்ப்பு யாருக்கும் கிடைக்காதுடா தம்பி… சரியா யூஸ் பண்ணிக்க; இளம் வீரருக்கு அட்வைஸ் கொடுத்த சேவாக்
ஐபிஎல் தொடரை சரியாக பயன்படுத்தி கொண்டு 2023ம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இஷான் கிஷன் இடம்பெற வேண்டும் என முன்னாள் இந்திய வீரரான விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
ரசிகர்களின் பெரும் ஆதரவோடு ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரில் இதுவரை 15 சீசன்கள் நிறைவடைந்துள்ளன. இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர் மார்ச் 31ம் தேதி துவங்கி மே மாத இறுதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் தோனி தலமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியை எதிர்கொள்ள உள்ளது.
அனைத்து தொடர்களை போல எதிர்வரும ஐபிஎல் தொடர் மீதும் மிக அதிகமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனால் முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலரும் எதிர்வரும் ஐபிஎல் தொடர் குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், ஐபிஎல் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான விரேந்திர சேவாக், இந்த வருட ஐபிஎல் தொடரை பயன்படுத்தி கொண்டு இஷான் கிஷன் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தனது இடத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து விரேந்திர சேவாக் பேசுகையில், “முதலில் நான் ருதுராஜ் கெய்க்வாட்டைத்தான் நினைத்தேன். ஆனால் அண்மைக்காலமாக இஷான் கிஷன் சரியாக ஆடவில்லை. இந்திய அணியிலும் அவருக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. எனவே அவர் ஐபிஎல்லில் சிறப்பாக ஆடவேண்டும் என்று நினைப்பார். ஐபிஎல்லில் நன்றாக ஆடினால் தான் ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கும் ” என்று தெரிவித்தார்.
இஷான் கிஷன் கடந்த சீசனில் சரியாக ஆடவில்லை. கடந்த சீசனில் சரியாக ஆடாமல் 418 ரன்கள் மட்டுமே அடித்தார். இந்த சீசனில் அவர் சிறப்பாக ஆடவேண்டியது அவசியம்.