தோனிக்கு கூட கிடைக்காத அதிர்ஷ்டம்… கேப்டனாக புதிய சரித்திரம் படைத்த ரோஹித் சர்மா
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி சாம்பியன் பட்டத்தையும் வென்றது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சாம்பியனை தீர்மானிக்கும் இறுதி போட்டி இலங்கையின் கொழும்பில் நடைபெற்றது.
இந்தியா இலங்கை இடையேயான இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
கெத்தாக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இலங்கை அணி, முகமது சிராஜின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வெறும் 50 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், பும்ராஹ் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதன்பின் 51 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு இஷான் கிஷனும், சுப்மன் கில்லும் துவக்க வீரர்களாக களமிறங்கினர். எவ்வித டென்ஷனும் இல்லாமல் ஈசியான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்த ஜோடி 6.1 ஓவரிலேயே இலக்கையும் இலகுவாக எட்டியது. இதன் மூலம் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, ஆசிய கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தையும் வென்றது.
இந்தநிலையில், இலங்கை அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் இந்திய கிரிக்கெட் அணி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. அதே போல் கேப்டனாக ரோஹித் சர்மாவும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். குறிப்பாக 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 3 முறை 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கொடுத்த ஒரே இந்திய கேப்டன் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.