ஐ.பி.எல் ஏலத்தில் கோடிகளை குவிக்க காத்திருக்கும் தென் ஆப்ரிக்காவின் நிகிதி
பெங்களூரில் வரும் 27 மற்றும் 28ம் தேதி நடைபெற உள்ள ஐ.பி.எல் வீரர்களுக்கான ஏலத்தில், தென் ஆப்ரிக்கா அணியின் பந்துவீச்சாளர் நிகிதிக்கு கடும் போட்டி நிலவும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் ஆண்டுதோறும் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் ஐ.பி.எல் டி.20 தொடர் வரும் ஏப்ரல் மாத இறுதியில் துவங்க உள்ளது.
சூதாட்ட புகாரில் சிக்கியதால் ஐ.பி.எல் டி.20 தொடரில் இருந்து இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த வருடம் மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுக்கிறது.
இதில் குறிப்பாக தமிழகத்தின் செல்ல பிள்ளையான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரீ எண்ட்ரீ கொடுக்க இருப்பதால் மற்ற ஐ.பி.எல் தொடர்களை விட இந்த தொடருக்கு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில், இந்தியாவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டி மூலம் தென் ஆப்ரிக்கா அணிக்கு அறிமுகமான வேகப்பந்து வீச்சாளர் நிகிதி, முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டையும், இர்னடாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் 6 விக்கெட்டையும் வீழ்த்தி, தென் ஆப்ரிக்கா அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.
தனது முதல் போட்டியிலேயே இந்திய அணியை திணற வைத்த நிகிதியின் பக்கம் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கும் அணிகளின் உரிமையாளர்கள் தங்கள் பார்வையை திருப்பியுள்ளனர்.
இதன் காரணமாக வரும் 27 மற்றும் 28ம் தேதி பெங்களூரில் நடைபெற இருக்கும் வீரர்களுக்கான ஏலத்தில் இவரை தங்களது அணியில் எடுத்து ஒவ்வொரு அணியும் கடுமையாக போட்டி போடும் என்று கிரிக்கெட் வல்லுநர்களும் தெரிவிக்கின்றனர்.
இதே போல், ஆஸ்திரேலியா அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் பெஹண்ட்ரூஃப் உள்ளிட்ட வீரர்களுக்கும் இந்த ஏலத்தில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.