இந்திய அணிக்காக ஆடும் போது தோனி ஒரு புறத்திலிருந்து ஆட்டத்தை தன்வசப்படுத்தி எடுத்துச் சென்று வெற்றிக்கு வித்திட்ட வேண்டுமென சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்
தோனி அந்தக் கடைசி சிக்ஸரை அடிக்காமல் இருந்திருந்தால் அவரது ரசிகர்கள் இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருக்க மாட்டார்கள். அவர் அடித்த இரண்டு சிக்ஸர்களும் அவர் மீதான விமர்சனங்களுக்கு பதிலடியாக அமைந்துவிட்டது. விராட் கோலி ஆட்டமிழக்கும் போது இந்திய அணிக்கு 38 பந்துகளில் 57 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. தோனி 34 பந்துகளில் 25 ரன் எடுத்திருந்தார். இந்தப் போட்டியை எப்படி முடிக்கப் போகிறார் என்ற கேள்வி நேற்றையப் போட்டியை பார்த்தவர்கள் மனதில் இருந்தது. அதோடு, சமீபகாலமாக பார்மில் இல்லாத தினேஷ் கார்த்திக் களத்தில் வந்து சேர்ந்தார்.
விராட் கோலி ஆட்டமிழந்த அடுத்த ஓவரிலேயே தன்னுடைய பதட்டமில்லாத பேட்டிங்கால் நெருக்கடியை தளர்த்திவிட்டார் தோனி. அதற்கு காரணம் அவரது முதல் சிக்ஸர். அந்த ஓவரில் மொத்தம் 11 ரன்கள் எடுக்கப்பட்டது. அடுத்தடுத்த ஓவரில் தினேஷ் கார்த்திக் இரண்டு பவுண்டரிகள் அடுத்து தோனிக்கு நல்ல ஒத்துழைப்பு தந்தார்.
கோலி ஆட்டமிழந்த பிறகு சரியாக 5 ஓவர்கள் தோனி – தினேஷ் ஜோடி விளையாடியது. இருவரும் ஒன்றும் பெரிதாக ஷாட் அடிக்கவில்லை. தோனி இரண்டு சிக்ஸர், தினேஷ் இரண்டு பவுண்டரி அவ்வளவுதான். மீதமுள்ள ரன்களை இருவரும் அடித்து ஓடியே எடுத்தார்கள். அதில், இருவரும் தலா ஒருமுறை 3 ரன்கள் அடித்தனர். கடைசி ஓவரில் 7 ரன் தேவைப்பட்ட நேரத்தில் முதல் பந்திலே சிக்ஸர் விளாசி ரசிகர்களுக்கு விருந்து படைத்தர் தோனி.
ஆனால், கடந்த வருடம் முழுவதுமே அவருக்கு மிகவும் மோசமாக அமைந்துவிட்டது. குறிப்பாக, இலங்கை அணிக்கு எதிராக 2017 டிசம்பரில் நடைபெற்ற போட்டி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டிகளில் அவரது ஆட்டங்கள் கடும் விமர்சத்திற்குள்ளாகி இருந்தது. அதிக பந்துகளை வீணடிக்கிறார், தன்னுடைய பழைய ஷாட்டுகளை அடிக்க திணறுகிறார் என்ற விமர்சனங்களுக்கு அவர் ஆளாக நேர்ந்தது. தோனியின் சகாப்தம் முடிந்துவிட்டது என்றே எல்லோரும் பேசிவிட்டார்கள்.
இந்நிலையில்தான், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்தும் கூட அவர் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். 4 ரன்னில் 3 விக்கெட்டை இழந்து தடுமாறிய நிலையில் இருந்த அணியை ரோகித் சர்மாவுடன் இணைந்து அவர் மீட்டெடுத்தார். இருந்த போதும், 96 பந்துகளில் 51 ரன்களை எடுத்தது மீண்டும் தோனிக்கு சிக்கலை ஏற்படுத்தியது. ஒருநாள் போட்டியை டெஸ்ட் போல் விளையாடுகிறார் என்று பலரும் கூறினார்கள்.
இக்கட்டான நிலையில் இரண்டாவது போட்டியில் களமிறங்கிய தன்னுடைய சிறப்பான ஆட்டத்தால் வெற்றியுடன் போட்டியை முடித்துக் கொடுத்துள்ளார். தோனி களமிறங்கிய போது இந்திய அணிக்கு 19.2 ஓவர்களில் அதாவது 116 பந்தில் 139 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. பந்திற்கும், ரன்னிற்கும் இடையில் சற்றே இடைவெளி இருந்தது.
முதலில் விராட் கோலியுடனும், பின்னர் தினேஷ் கார்த்திக்குடனும் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினார் தோனி. இரண்டு சிக்ஸர்கள் போக மீதமுள்ள ரன்களை அடித்தே சேர்த்தார். பதட்டமில்லாமல் தன்னுடைய ஸ்டைலில் தோனி போட்டியை பினிஷிங் செய்தார். ‘வின்டேஜ்’ தோனியை எல்லோராலும் பார்க்க முடிந்தது.
தன்னுடைய ஆஸ்தான வீரர் நீண்ட நாட்களுக்கு பிறகு எல்லோராலும் பாராட்டும் வகையில் போட்டியை சிறப்பாக விளையாடி முடித்துள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. மிக்க மகிழ்ச்சியுடன் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பதிவிட்டு குவித்தனர். இரண்டு வருடங்களாக அடக்கி வைத்திருந்த ஆதங்கத்தை நேற்றைய தினம் கொட்டித் தீர்த்தனர்.