ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. கடந்த 1975 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2019 ஒருநாள் உலகக் கோப்பை, வரும் மே 30 முதல் ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் க்ரிக்இன்ஃபோ இணையத்தளத்துக்கு சச்சின் டெண்டுல்கர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
என்னைப் பொறுத்தவரை தோனி 5-ம் நிலை வீரராகக் களமிறங்கவேண்டும். ரோஹித் சர்மா, தவன், கோலி, 4-ம் நிலை வீரர், தோனி என்றுதான் பேட்டிங் வரிசை இருக்கவேண்டும். பிறகு பாண்டியா களமிறங்கலாம்.
அரையிறுதிக்கு இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் நிச்சயமாக அரையிறுதிக்குள் நுழையும். நான்காவது அணியாக நியூஸிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளில் ஒன்று இருக்கலாம் என்று கூறினார்.
விராட் கோலி மிகச்சீரான முறையில் பிரமாதமான இன்னிங்ஸ்களினால் பல போட்டிகளை இந்திய அணிக்காக வென்று கொடுத்திருக்கலாம் ஆனால் உலகக்கோப்பைத் தொடரில் அவர் ஒரு தனிநபராக ஒரு போதும் உலகக்கோப்பையை வெல்ல முடியாது, மற்ற வீரர்களும் தங்கள் ஆட்டங்களை மேம்படுத்த வேண்டும் என்று மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
ஒவ்வொரு போட்டியிலும் இரண்டு வீரர்கள் தங்கள் ஆட்டத்தை வேறு மட்டத்துக்குக் கொண்டு செல்வது அவசியம், அணியினர் உதவியின்றி நீங்கள் அதிகம் எதுவும் செய்து விட முடியாது. ஒரேயொரு தனிநபரால் (விராட் கோலி) ஒரு தொடரையே வெல்ல முடியாது. ஆம் வழியில்லை. ஒவ்வொரு முக்கியக் கட்டத்திலும் பிற வீரர்களும் பங்களிப்ப்பு செய்வது அவசியம். இது நடக்கவில்லையெனில் நிச்சயம் ஏமாற்றமே மிஞ்சும்.
அதே போல் 4ம் நிலை என்பது வெறும் எண் தான். அந்த இடத்தில் ஆட நம்மிடையே பேட்ஸ்மென்கள் உள்ளனர். எனவே அந்த இடம் அட்ஜஸ்ட் செய்யக் கூடியதுதான், எனவே 4ம் நிலை என்று ஊதிப்பெருக்கப்படும் ஒரு இடம் பெரிய பிரச்சினையில்லை என்றே நான் கருதுகிறேன். 4, 6, அல்லது 8 என்று எந்த இடமாக இருந்தாலும் அங்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும் அளவுக்கு நம் வீரர்கள் போதிய கிரிக்கெட் அனுபவம் உள்ளவர்கள்தான். சூழ்நிலை குறித்த விழிப்புணர்வு மிக முக்கியம்.