சச்சின் டெண்டுல்கர் மகளான சாரா டெண்டுல்கருக்கு தொல்லை கொடுத்ததால் கைது செய்யப்பட்ட இளைஞர் குறித்த தகவல்களை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
கிரிக்கெட் உலகின் முன்னாள் ஜாம்பவானும், தற்போதைய மேலவை உறுப்பினருமான சச்சின் டெண்டுலரின் மகளான சாரா டெண்டுல்கருக்கு கடந்த சில தினங்களாக இளைஞர் ஒருவர் தொலைபேசி மூலம் தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார்.
இது குறித்து சச்சினின் குடும்பத்தினர் மும்பையின் பந்த்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் சாரா டெண்டுல்கருக்கு தொல்லை கொடுத்தவர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தேவ்குமார் மைதி என்ற இளைஞர் என்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து இவரை கைது செய்த போலீஸார் மைதியை கைது செய்து சிறையில் அடைத்து அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இது போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் “மைதி சச்சினின் மகளான சாராவை தொலைக்காட்சியில் பார்த்தவுடன் அவர் மீது காதல் கொண்டுவிட்டதாகவும், அதன் காரணமாகவே சச்சின் வீட்டின் தொலைபேசி நம்பரை கண்டுபிடித்து கடந்த 20 தினங்களுக்கு மேலாக சாராவிற்கு தொலைபேசி மூலம் தொல்லை கொடுத்தது” தெரியவந்துள்ளது.
இது குறித்து பிஸ்மன் காய்கோவர் என்ற போலிஸ் அதிகாரி கூறுகையில் “மைதி கடந்த 20 தினங்களாக தினமும் சாராவிற்கு போன் செய்து தனது காதலை ஏற்றுக்கொண்டு தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார், இல்லையென்றால் சாராவை கடத்தி கட்டாய திருமணம் செய்து கொள்வேன் என்றும் மைதி மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார் அந்த காவல்த்துறை அதிகாரி.
தற்போது மைதியின் தொலைபேசி உள்பட அனைத்து மின்னணு சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு அவர் இதேபோல் வேறு பெண்களுக்கும் தொல்லை கொடுத்துள்ளாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் மைதியை பாந்த்ரா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய மும்பை காவல்த்துறையினர், நீதிமன்ற அனுமதியுடன் அவரை ஜனவரி 11ம் தேதி தங்களது காவலில் எடுத்து அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனால், கைது செய்யப்பட்டுள்ள மைதி கடந்த சில ஆண்டுகளாகவே உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு உளவியல் ரீதியான சிகிச்சை தேவை என்றும் மைதியின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.