டெல்லி மைதானத்தை விட மோசமான காற்று மாசு கொண்ட மைதானத்தில் கிரிக்கெட் ஆடிய ஆஸ்திரேலிய வீரர்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி நகரில் காற்று மாசுபாடு காரணமாக உருவான கடுமையான புகை மண்டலத்துக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்தியாவில் ரஞ்சிக்கோப்பை தொடரை போல ஆஸ்திரேலியாவின் முதல் தர உள்ளூர் தொடர் ஷெபீல்டு ஷீல்டு.
இதில் நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து அணிகள் மோதிய போட்டி சிட்னி மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் குயின்ஸ்லாந்து 240, நியூ சவுத் வேல்ஸ் 375 ரன்கள் எடுத்தன. 3வது நாள் முடிவில் இரண்டாவது இன்னிங்சில் குயின்ஸ்லாந்து 111/5 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், நேற்று கடைசிநாள் ஆட்டம் நடந்தது. சிட்னிக்கு வெளியே ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக நகரம் முழுவதும் புகை மண்டலமாக காணப்படுகிறது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் திட்டமிட்டபடி போட்டி நடைபெற்றாக வேண்டும் என்பதால், இந்த புகையில் போட்டி தொடர்ந்தது. குயின்ஸ்லாந்து 176 ரன்னுக்கு ஆல் அவுட்டாக, நியூ சவுத் வேல்ஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் 41/1 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டில் வெற்றி பெற்றது.
சமீபத்தில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதிய போட்டியின் போது, டெல்லியில் காற்று மாசுபாடு அதிகம் இருந்தது. இந்த போட்டி டெல்லி மைதானத்தில நடைபெற்றால் வீரர்களின் உடல்நலம் பாதிக்கப்படலாம் ஆதலால், போட்டியை வேறு மைதானத்திற்கு மாற்றுங்கள். இல்லையேல் நிறுத்துங்கள் என சுற்றுசூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்க்கு பிசிசிஐ செவிசாய்க்கவில்லை.
தற்போது சிட்னி மைதானத்தில் அதைவிட மோசமாக காற்றுமாசு இருந்தது. நியூ சவுத் வேல்ஸ் வீரர் போட்டி குறித்து பேசுகையில்,”ஒரே நாளில் பல சிகரெட்டுகளை குடித்தது போல உடல்நிலை இருந்தது. அவ்வளவு மோசமாக காற்று மாசுபாடு இருந்தது. பார்ப்பதற்கும், சுவாசிப்பதற்கும் கடினமாக இருந்தது” என்றார்.