சையத் முஸ்தாக் அலி தொடரின் லீக் போட்டியில் டெல்லி வீரர் காம்பீர் சொதப்பினாலும் ரானாவின் மற்றும் துருவ்வின் அதிரடியின் மூலம் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவில் நடக்கும் உள்ளூர் ரஞ்சிக்கோப்பை தொடரைப்போல டி-20 தொடர் சையது முஸ்தாக் அலி கோப்பை தொடர் நடத்தப்படுவதும் வழக்கம்.
இதில் இந்தியாவின் உள்ளூர் அணிகள் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தி என ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளில் பங்கேற்கும்.
இதில் நேற்றைய லீக் போட்டியில் ஹரியான அணி டெல்லியை எதிர்கொண்டது.
இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் சங்வான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஹரியான அணி பிசோனி 65 ரன்களும், ரோஹில்லா 44 ரன்களும் எடுத்து கைகொடுத்தாலும் மற்ற வீரர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ரன் எடுக்காமல் வந்த வேகத்தில் நடையை கட்டியதால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த ஹரியானா அணி 153 ரன்கள் எடுத்தது.
பந்துவீச்சில் டெல்லி அணி சார்பில் அதிகபட்சமாக பாட்டீ 4 ஓவரில் 25 ரன்களை விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் துவக்க வீரர்களான காம்பீர் 19 ரன்னிலும், ரிஷப் பண்ட் 9 ரன்னிலும் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர்.
இதனையடுத்து கூட்டணி சேர்ந்த நிதிஷ் ராணா – துருவ் சோரி ஜோடி, டெல்லி அணியை சரிவில் இருந்து மீட்டு மளமளவென ரன் குவித்தது.
ராணா 39 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 39 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தாலும், மறுமுனையில் துருவ் சோரி, லலித் யாதவுடன் கூட்டணி சேர்ந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார்.
இறுதி வரை ஆட்டமிழக்காமல் துருவ் சோரி 59 ரன்களும், யாதவ் 19 ரன்களும் எடுத்து கைகொடுத்ததன் மூலம் 17வது ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 153 என்ற இலக்கை கடந்த டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.
ஹரியானா அணி சார்பில் ஹூடா, திவேட்டியா மற்றும் பட்டேல் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
நேற்று முன் தினம் நடைபெற்ற பஞ்சாப் அணியுடனான போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்ட டெல்லி அணி, இந்த போட்டியின் மூலம் தனது வெற்றி கணக்கை துவங்கியுள்ளது.