ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் டெல்லி கேப்பிடல் அணியின் சிரேயாஸ் ஐயர் குறித்து பேசியுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான தொடரின் போது தோல்பட்டையில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக அந்த தொடரில் இருந்து வெளியேறினார் மேலும் அதனை தொடர்ந்து நடைபெற்ற 2021 ஐபிஎல் தொடரின் முதல் பாதியிலும் பங்கு கொள்ளவில்லை.
இதன் காரணமாக டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டார். ஆனால் துபாயில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற 2021 ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் டெல்லி அணிக்கு திரும்பினார் இந்நிலையில் மீண்டும் டெல்லி அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் செயல்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில் டெல்லி அணி நிர்வாகம் ரிஷப் பண்டை இந்த தொடரின் கேப்டனாக அறிவித்தது.
இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான துபாயில் நடைபெற்ற 2021 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 41 பந்துகளில் 47 ரன்கள் அடித்து டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கிய வீரராக திகழ்ந்தார்.
இதனால், காயத்தில் இருந்து மீண்டு திரும்பிய ஸ்ரேயாஸ் ஐயர் மிக சிறந்த முறையில் விளையாடியது குறித்து கிரிக்கெட் வல்லுநர்கள் உட்பட பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர், இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் பிராட் ஹாக், ஸ்ரேயாஸ் ஐயர் குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது பேசியுள்ளார்.
அதில் பேசிய அவர், காயத்திலிருந்து மீண்டு வந்த ஸ்ரேயாஸ் ஐயர் முதல் போட்டியை எதிர் கொள்வது என்பது மனதளவில் மிகப் பெரும் சவாலாக இருக்கும்,மேலும் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாத வருத்தமும் அவர் மனதில் இடம் பெற்றிருக்கும் ஆனால் அதை எதையுமே பொருட்படுத்தாமல் தனது வேலையை சிறப்பாக செய்தார் நிச்சயம் நான் அடித்துக் கூறுவேன் இவர் வருங்கால இந்திய அணியின் ஒரு ஆளுமை மிக்க கேப்டனாக வலம் வருவார் என்று பிராட் ஹாக் பாராட்டினார்.