இந்திய அணியில் இடம் கிடைக்க டிராவிட் தான் காரணம் என்று கூறியுள்ளார். சுப்மன் கில்
19 வயதான சுப்மான் கில், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். இந்த சீசனில் ரஞ்சி கிரிக்கெட்டில் பஞ்சாப் அணிக்காக 10 ஆட்டங்களில் விளையாடி 790 ரன்கள் குவித்தார். இதில் தமிழகத்திற்கு எதிராக 268 ரன்கள் குவித்ததும் அடங்கும். நியூசிலாந்தில் கடந்த ஆண்டு நடந்த ஜூனியர் உலக கோப்பையை இந்திய அணி கைப்பற்றிய போது, அதில் தொடர்நாயகனாக (5 ஆட்டத்தில் 373 ரன்) சுப்மான் கில் தேர்வு செய்யப்பட்டது நினைவு கூரத்தக்கது.
முதல்முறையாக தேசிய அணிக்கு அழைக்கப்பட்டுள்ள சுப்மான் கில் நிருபர்களிடம் கூறுகையில், ‘நியூசிலாந்து தொடருக்கு தேர்வு செய்யப்பட்டது, எனக்கு மிகப்பெரிய சாதகமான அம்சமாகும். ஏனெனில் நியூசிலாந்தில் நடந்த ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடியுள்ளேன். இப்போது அங்கு ஆடுவதற்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அங்கு ஏற்கனவே விளையாடிய அனுபவம் இருப்பதால் ஆட்டநுணுக்க விஷயத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் களம் காண வாய்ப்பு கிடைத்தால், நெருக்கடியை மட்டும் சமாளிக்க வேண்டி இருக்கும்’ என்றார்.
விஜய் சங்கர் நேற்று கூறியதாவது:-
முத்தரப்பு 20 ஓவர் தொடர் முடிந்து முதல் இரண்டு நாட்கள் மிகவும் கடினமாகவும், வேதனையாகவும் இருந்தது. ஆனால் அதுவே ஒரு கிரிக்கெட் வீரராக என்னை மேம்படுத்திக்கொள்ளவும், சமூக வலைதளங்களின் நெருக்கடியை சமாளிக்கவும் உதவிகரமாக இருந்தது. அந்த போட்டிக்கு பிறகு தினேஷ் கார்த்திக், ரோகித் சர்மா உள்ளிட்டோர் வந்து, கிரிக்கெட்டில் இது மாதிரி நடப்பது சகஜம் என்று கூறி என்னை தேற்றினர். நானும் அதை மறந்து விட்டு, முதல்தர மற்றும் ஏ அணிக்கான போட்டிகளில் ரன்கள் குவிப்பதில் கவனம் செலுத்தினேன்.
இப்போது நான் மனரீதியாக வலுவுடன் இருக்கிறேன். ஆட்டங்களை வெற்றிகரமாக முடித்து தர முடியும் என்று முழுமையாக நம்புகிறேன். நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கு எதிரான தொடர் எனது ஆட்டத்திறனை வளர்த்துக் கொள்ள உதவியதுடன், நிறைய அனுபவங்களை கற்றுத்தந்தது. இந்திய ‘ஏ’ அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், போட்டியை வெற்றியுடன் முடித்து தரும் எனது திறமை மீது நம்பிக்கை வைத்து 5-வது பேட்டிங் வரிசையில் என்னை இறக்கினார். அந்த வரிசை எனது பேட்டிங் ஸ்டைலுக்கு பொருத்தமாக இருந்தது.
இதில் இரண்டு ஆட்டங்கள் நெருக்கமாக இருந்தன. ஒரு ஆட்டத்தில் கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தேன். இன்னொரு ஆட்டத்தில் 300 ரன்கள் மேலான இலக்கை விரட்டிய போது 87 ரன்கள் விளாசியது எனது நம்பிக்கையை அதிகப்படுத்தியது. அணிக்கு என்ன தேவையோ அதை என்னால் செய்ய முடிந்தது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் கிடைக்குமா? என்பது குறித்து சிந்தித்து கொண்டிருக்கவில்லை. அது பற்றிய நினைப்புடன் இருந்தால் இயல்பாக ஆட முடியாது. களம் காண எனக்கு வாய்ப்பு கிடைத்தால், அதை சரியாக பயன்படுத்திக்கொள்வது முக்கியம். போட்டிக்கு தயாராக உள்ளேன். இவ்வாறு விஜய் சங்கர் கூறினார்.