என் பையன நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு… சுப்மன் கில்லின் தந்தை நெகிழ்ச்சி
பாகிஸ்தான் அணிக்கு எதிரான U19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணி வெற்றுபெறுவதற்கு மிக முக்கிய காரணமாக தனது மகன் இருந்தது குறித்து சுப்மன் கில்லின் தந்தை பெருமிதம் தெரிவித்துள்ளார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு சுப்மன் கில் அதிரடி சதம் அடித்து கைகொடுத்தன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 272 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்கை துரத்தி களமிறங்கிய பாகிஸ்தான் வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வந்த வேகத்தில் வெளியேறியதால் 69 ரன்கள் மட்டுமே எடுத்தபோது பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன் மூலம் 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்திய அணியின் இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த சுப்மன் கில்லை, சேவாக், சச்சின், ரெய்னா உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் பலர் வெகுவாக பாராட்டி வருகின்றனர். கிரிக்கெட் ரசிகர்களும் சமூக வலைதளங்கள் மூலம் சுப்மன் கில்லை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் தனது மகனின் தற்போதைய நிலை குறித்து சுப்மன் கில்லின் தந்தை லாக்விண்டர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
சுப்மன் கில் குறித்து அவரது தந்தை ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் “கடுமையான போராட்டத்திற்கு பிறகே எனது மகன் இத்தகைய உயரத்தை அடைந்துள்ளான். அவனின் இந்த வளர்ச்சிக்கு நாங்களும் உறுதுணையாக இருந்துள்ளோம். சிறு வயதில் இருந்தே சுப்மன்
விளையாட்டு பொம்மைகள் மீது ஆர்வம் செலுத்த மாட்டான். எப்பொழுதும் பேட்டும் கையுமாகவே இருப்பான். அவன் 15 வயதாக இருக்கும் போதே நாங்கள் முடிவு செய்துவிட்டோம், சுப்மனை சர்வதேச அளவில் சிறந்த கிரிக்கெட் வீரராக மாற்ற வேண்டும் என்று, எங்களது கனவும் இன்றும் பலித்துவிட்டது” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.