அனுபவம் வாய்ந்த சுரேஷ் ரெய்னா அல்லது கவுதம் கம்பிர் ஆகியோர் மீண்டும் இந்திய அணிக்கு வந்தால், இந்திய அணிக்கு பலம் கூடும் என முன்னாள் இந்திய அணியின் தேர்வாளர் சையத் கிர்மானி கூறியுள்ளார்.
2019 உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு, பலம் வாய்ந்த இந்திய அணியை உருவாக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதனால், இளம் வீரர்களுக்கு 2019 உலகக்கோப்பையில் விளையாட அதிக வாய்ப்பு உள்ளது.
அதே சமயத்தில் சீனியர் வீரரான யுவராஜ் சிங், சாம்பியன்ஸ் டிராபி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தொடர்களில் சோபிக்காத காரணத்தினால், அவரின் இடம் சந்தேகத்தில் தான் உள்ளது.
“கடந்த சில தொடர்களில், நாம் எதிர்பார்த்தது போல் யுவராஜ் சிங் விளையாடவில்லை. இந்த வயதில் இது போன்று நடப்பது இயற்கை தான்,” என கிர்மானி கூறினார்.
பல போட்டிகளில் விளையாடி அனுபவம் வாய்ந்த யுவராஜ் சிங், இந்திய அணியில் இருப்பது இந்திய அணிக்கு பலம் தான்.
“அந்த இடத்தில் ரிஷப் பண்ட் விளையாடவும் அதே உரிமை உள்ளது. உறுதியாக அனைத்து போட்டிகளிலும் விளையாடுபவர் தான் அணியில் இருக்க வேண்டும். அனுபவம் வாய்ந்த சுரேஷ் ரெய்னா அல்லது கவுதம் கம்பிர் அணிக்கு திரும்பினால் இந்திய அணிக்கு பலம் கூடும். ஏனென்றால், இளம் வீரர்களுக்கு இன்னும் காலம் இருக்கிறது. நான் ஒரு தேர்வாளராக இதை தான் யோசிப்பேன்,” என கிர்மானி கூறினார்.