வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இந்திய வீரர் இஷாந்த் சர்மா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இப்போது இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதலாவது டெஸ்ட் ஆன்டிகுவாவில் நடந்து வருகிறது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 297 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. ரஹானே 81 ரன்களும் ஜடேஜா 58 ரன்களும் எடுத்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கெமர் ரோச் 4 விக்கெட்டுகளும் கேப்ரியல் 3 விக்கெட்டுகளும் சேஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது வெஸ்ட் இண்டீஸ். அந்த அணி, இந்திய பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தது. இதனால், நேற்றைய ஆட்ட நேர முடிவில் அந்த அணி, 8 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்துள்ளது. அதிகப்பட்சமாக சேஸ் 48 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஹோல்டர் 10 ரன்களுடனும் கம்மின்ஸ் ரன் கணக்கைத் தொடங்காமலும் களத்தில் உள்ளனர்.
இந்திய தரப்பில் இஷாந்த் சர்மா அபாரமாக பந்துவீசி 5 விக்கெட் வீழ்த்தினார். பும்ரா, ஷமி, ஜடேஜா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 3 ஆம் நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.
இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஏன் இடம்பெறவில்லை என மிகவும் ஆத்திரத்துடன் கேள்வி எழுப்பியிருக்கிறார் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி.
இது குறித்து அவர் பேசியதாவது….
ஆம், எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த போட்டியில் அஸ்வின் மட்டும் ரோஹித்தை ஏன் எடுக்கவில்லை? மேலும், குல்தீப் யாதவும் இடம்பெறவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி போட்டியில் அவர் ஆடினார். மேலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அவரை அணியில் எடுக்காதது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் அற்புதமாகப் ஆடுவார் என அனைவருக்கும் தெரியும். அவரை ஏன் எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார் சவுரவ் கங்குலி.
இந்நிலையில் ஆடும் லெவனில் அவர் சேர்க்கப்படாதது ஏன் என்பது பற்றி, துணை கேப்டன் ரஹானே கூறும்போது, ‘’ரோகித் சர்மா, அஸ்வின் போன்ற வீரர்கள் ஆடும் லெவனில் இல்லாமல் இருப்பது கஷ்டமானதுதான். ஆனால், அணி நிர்வாகம் எப்போதும் சரியாக யோசித்தே சிறந்த காம்பினேஷனை தேர்வு செய்யும்.
அதனால் இந்த பிட்சின் தன்மைக்கு ஜடேஜா சிறப்பாக பந்துவீசுவார் என்று நம்பியதால் அஸ்வினுக்குப் பதில் அவரை தேர்வு செய்திருக்கிறார்கள். அதோடு ஆறாவது பேட்ஸ்மேன் ஒருவர் தேவைப்படுவதால், பேட்டிங் மற்றும் பந்துவீசும் விஹாரியை தேர்வு செய்திருக்கிறார்கள். பயிற்சியாளர் மற்றும் கேப்டனும் இணைந்து இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்