இந்தியாவின் தொடர் தோல்விக்கு இது தான் காரணம்.. ஸ்ரீ காந்த் சொல்கிறார்
தென் ஆப்ரிக்கா மண்ணில் இந்திய அணிக்கு போதிய ஆதரவு இல்லாமல் இருப்பது கூட இந்திய அணியின் தோல்விக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீ காந்த் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்திருந்த நிலையில், செஞ்சூரியன் மைதானத்தில் இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது.
இதில் 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய இந்திய அணி, தனது மோசமான பேட்டிங் காரணமாக இலக்கை எட்ட முடியாமல் 135 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து, 2 – 0 என்ற கணக்கில் தொடரையும் இழந்தது.
இந்நிலையில் இந்த தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீ காந்த், தென் ஆப்ரிக்கா மண்ணில் இந்திய அணிக்கு ரசிகர்கள் மத்தியில் போதிய ஆதரவு இல்லாதது கூட தோல்விக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய ஸ்ரீ காந்த் “278 ரன்கள் இலக்கு என்பது சற்று கடினமானது தான், ஆனால் அதற்காக இது ஒன்றும் எட்ட முடியாத இலக்கு இல்லை. மோசமான பேட்டிங் காரணமாகவே இந்திய அணி தோல்வியடையும் நிலை ஏற்பட்டது. ஆனால் அதே வேளையில் இந்திய கேப்டன் கோஹ்லியை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். அவரது பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் அவர் வகுத்த வியூகங்களை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்” என்று ஸ்ரீ காந்த் தெரிவித்துள்ளார்.
இரு அணிகள் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி வரும் 24ம் தேதி தென் ஆப்ரிக்காவின் ஜோஹன்ஸ்பெர்க்கில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.