சையத் முஸ்தாக் அலி தொடரின் இன்றைய ஹைதரபாத் – கர்நாடகா இடையேயான போட்டியில் ஹைதரபாத் வீரர்கள் தங்களுக்கு சூப்பர் ஓவர் வேண்டும் என்று கேட்டு ஆர்பாட்டம் செய்துள்ளனர்.
இந்தியாவில் நடக்கும் உள்ளூர் ரஞ்சிக்கோப்பை தொடரைப்போல டி-20 தொடர் சையது முஸ்தாக் அலி கோப்பை தொடர் நடத்தப்படுவதும் வழக்கம்.
இதில் இந்தியாவின் உள்ளூர் அணிகள் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தி என ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளில் பங்கேற்கும்.
இந்த ஆண்டுக்கான தொடர் தற்போது இந்தியாவின் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இதில் கர்நாடகாவில், ஹைதரபாத் – கர்நாடகா இடையேயான லீக் போட்டி இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் ஹைதரபாத் அணியின் கேப்டன் அம்பத்தி ராயூடு முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கர்நாடகா அணிக்கு, அந்த அணியின் கே.கே நாயர் 77 ரன்களும், கவுதம் 57 ரன்களும் எடுத்து கைகொடுத்ததன் மூலம் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த கர்நாடக அணி 205 ரன்கள் எடுத்தது.
இதில் கர்நாடகாவின் இன்னிங்ஸின் போது ஒரு பந்து பவுண்டரியை கடந்ததை சரியாக கவனிக்காத அம்பயர் அந்த பந்திற்கு 2 ரன்கள் மட்டுமே வழங்கினார்.
இதனையடுத்து கர்நாடக அணியின் கேப்டனான வினய் குமார், அம்பயரிடம் முறையிட்டு மீதமுள்ள இரண்டு ரன்களை கேட்டு வாங்கினார், இந்த இரண்டு ரன்கள் கர்நாடக அணி எடுத்த 203 ரன்களுடன் சேர்க்கப்பட்டு கர்நாடக அணி 205 ரன்கள் எடுத்ததாக அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய ஹைதரபாத் அணி ரெட்டி 70 ரன்களும் அகர்வால் 38 ரன்களும், சந்தீப் 34 ரன்களும் எடுத்து கைகொடுத்தாலும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால் ஹைதரபாத் அணியின் வெற்றிக்கு கடைசி ஒரு ஓவரில் 8 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலைமை ஏற்பட்டது.
கடைசி ஓவரை வீசிய ஸ்டூவர்ட் பின்னி, தனது துல்லியமான பந்துவீச்சு மூலம் ஹைதரபாத் அணியை கட்டுப்படுத்தியால், கடைசி ஒரு பந்திற்கு 3 ரன்கள் தேவை என்ற பரபரப்பான நிலை ஏற்பட்டது.
போட்டியின் வெற்றியை தீர்மானிக்கும் அந்த கடைசி பந்தில் ஹைதரபாத் அணி சார்பாக ஸ்ட்ரைக்கிங் எண்டில் நின்றிருந்த முகமது சிராஜை, ஸ்டூவர் பின்னி அவுட்டாக்கி அசத்தினார். இதன் மூலம் கர்நாடகா அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
கர்நாடகா அணிக்கு கடைசியாக கொடுக்கப்பட்ட அதே இரண்டு ரன்களில் தோல்வியடைந்ததால் கடுப்பான ஹைதரபாத் வீரர்கள், அம்பயரின் தவறான முடிவால் தான் தாங்கள் தோல்வியடைந்து விட்டதாகவும், தங்களுக்கு சூப்பர் ஓவர் வேண்டும் என்றும் மைதானத்தின் நடுவில் நின்று கூச்சலிட்டுள்ளனர்.
ஹைதரபாத் அணியின் கேப்டன் அம்பத்தி ராயூடு தலைமையில் ஹைதரபாத் வீரர்கள் நீண்ட நேரம் கூச்சலிட்டதால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக அதே மைதானத்தில் நடைபெற இருந்த ஆந்திரா – கேரளா இடையேயான போட்டியின் ஓவர் 13ஆக குறைக்கப்பட்டுள்ளது.