இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இளம் வீரர்கள் பொறுப்புடன் விளையாடியது மகிழ்ச்சியளிப்பதாக இலங்கை தொடருக்கான இந்திய அணியின் கேப்டனான ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
இந்தியா இலங்கை இடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்பில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணிக்கு கேப்டன் ஷனாகா 39 ரன்களும், அஸ்லன்கா 38 ரன்களும், கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய கருணாரத்னேன் 43* ரன்களும் எடுத்ததன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி 262 ரன்கள் குவித்தது.
இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ், தீபக் சாஹர் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு ப்ரித்வி ஷாவும், ஷிகர் தவானும் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.
போட்டியின் முதல் ஓவரில் இருந்தே இலங்கை அணியின் பந்துவீச்சை அசால்டாக சிதறடித்த ப்ரித்வி ஷா 24 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். இதன்பின் களத்திற்கு வந்த அறிமுக வீரரான இஷான் கிஷன் தனது அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்து பல்வேறு சாதனைகள் படைத்துவிட்டு 59 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இதன்பின் வந்த மணிஷ் பாண்டே 26 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினாலும், மறுமுனையில் நங்கூரமாக நிலைத்து நின்று இலங்கை அணியின் பந்துவீச்சை இறுதி வரை அசால்டாக எதிர்கொண்ட ஷிகர் தவான் 95 பந்துகளில் 86* ரன்களும், சூர்யகுமார் யாதவ் 20 பந்துகளில் 31* ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 36.4 ஓவரிலேயே இலக்கை இலகுவாக எட்டிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தநிலையில், இலங்கை அணியுடனான இந்த வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டனான ஷிகர் தவான், இளம் வீரர்களின் பொறுப்பான ஆட்டம் மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஷிகர் தவான் பேசுகையில், “எங்கள் அணியின் அனைத்து வீரர்களும் மிக சிறப்பாக விளையாடினர். இளம் வீரர்கள் விளையாடிய விதம் மகிழ்ச்சியளிக்கிறது. அதிரடியாக விளையாடினாலும் பொறுப்புடன் விளையாடினார்கள். இளம் வீரர்களின் பொறுப்பான அதிரடி ஆட்டத்தை எதிர்முனையில் நின்று பார்த்தது கூட மகிழ்ச்சியை கொடுத்தது. இளம் வீரர்களாக இருந்தாலும் ஐபிஎல் தொடரின் மூலம் இளம் வீரர்கள் அதிக நம்பிக்கையும், அனுபவமும் கிடைத்துள்ளது. இஷான் கிஷன் மற்றும் ப்ரித்வி ஷாவின் ஆட்டத்தை பார்க்கும் பொழுது இருவரும் 15 ஓவர்களில் போட்டியை முடித்துவிடுவார்கள் என தோன்றியது. நான் சதம் அடிப்பது குறித்து யோசித்தேன், ஆனால் அந்த சமயத்தில் சதம் அடிக்க அதிகமான ரன்கள் தேவை இருந்ததால், இறுதி வரை ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றியை பெற்று கொடுப்பதில் கவனம் செலுத்தினேன். பந்துவீச்சில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களும் மிக சிறப்பாக செயல்பட்டனர்” என்று தெரிவித்தார்.