உண்மையை சொல்லனும்னா டீம்ல இந்த பையன அடிச்சிக்க வேற ஆளே கிடையாது; இளம் வீரரை பாராட்டி பேசிய ரோஹித் சர்மா
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்திய அணியும், வங்கதேச அணியும் மோதின.
இலங்கையின் கொழும்பில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷாகிப் அல் ஹசன் 80 ரன்களும், தவ்ஹித் ஹிர்தாய் 54 ரன்களும் எடுத்தனர்.
இதன்பின் 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரரான சுப்மன் கில் நீண்ட நேரம் போராடி 133 பந்துகளில் 121 ரன்களும், கடைசி நேரத்தில் போராடிய அக்ஷர் பட்டேல் 34 பந்துகளில் 42 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்கள் தங்களது பங்களிப்பை செய்து கொடுக்க தவறியதால் 49.5 ஓவரில் 259 ரன்கள் எடுத்த போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்தநிலையில், வங்கதேச அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய இந்திய அணீயின் கேப்டனான ரோஹித் சர்மா, சதம் அடித்த சுப்மன் கில்லை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.
இது குறித்து ரோஹித் சர்மா பேசுகையில், “நாங்கள் எங்கள் சீனியர் வீரர்களுக்கு சிறிது ஓய்வு கொடுக்க விரும்பினோம், இதற்காகவே விராட் கோலி, ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்களுக்கு இந்த போட்டியில் இருந்து ஓய்வு கொடுத்தோம். அதற்காக இந்த போட்டிக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்ற அர்த்தம் இல்லை, அணியில் இருக்கும் மற்ற வீரர்களுக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றே விரும்பினோம். உலகக்கோப்பை நெருங்கிவிட்டதால் அதற்கு முன் அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுத்து பார்க்க வேண்டும். அக்ஷர் பட்டேல் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டார், ஆனால் அவரால் போட்டியை வெற்றிகரமாக முடித்து கொடுக்க முடியவில்லை. வங்கதேச அணியின் பந்துவீச்சாளர்களுக்கு எனது வாழ்த்துக்கள், அவர்கள் மிக சிறப்பாக செயல்பட்டனர். சுப்மன் கில் பேட்டிங்கில் மிக சிறப்பாக செயல்பட்டார். தனது வேலை என்ன என்பது சுப்மன் கில்லுக்கு தெரியும், அதை அவர் சரியாகவும் செய்து கொடுக்கிறார். கடந்த ஒரு வருடமாக பேட்டிங்கில் மிக சிறப்பாக செயல்பட்டு வரும் சுப்மன் கில்லிற்கு மாற்றான ஒரு துவக்க வீரர் தற்போது இல்லை என்பதே உண்மை” என்று தெரிவித்தார்.