ஆஸ்திரேலியாவை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
ஆஸ்திரேலிய சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.
இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து, தனது முதல் இன்னிங்ஸில் 369 ரன் குவித்தது.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணிக்கு சீனியர் பேட்ஸ்மேன்கள் பலர் ஏமாற்றம் கொடுத்தாலும், வாசிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் தங்களது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 336 ரன்கள் எடுத்தது.
33 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் 48 ஹரிஸ் 38, ஸ்மித் 55 ரன்களும் எடுத்து கைகொடுத்ததன் மூலம் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 294 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு 327 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்திய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய முகமது சிராஜ் 5 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து 328 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறகிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா 7 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், மற்றொரு துவக்க வீரரான சுப்மன் கில் 91 ரன்கள் எடுத்து கொடுத்தார்.
இதன்பின் களமிறங்கிய ரஹானே 24 ரன்களில் விக்கெட்டை இழந்தார், நம்பிக்கை நாயகனான புஜாரா வழக்கம் போல ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டு 211 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து கொடுத்தார். கடந்த போட்டியை போலவே இந்த போட்டியிலும் அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 89 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் ஆஸ்திரேலிய அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியுள்ளது.
ஆஸ்திரேலிய அணியுடனான இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
இந்திய அணி ஒரு போட்டியில் வென்றால் கூட அதுவே பெரிய விசயம் என முன்னாள் வீரர்கள் பலர், கணித்திருந்த நிலையில், அனைவரும் கணிப்பையையும் தவிடுபொடியாக்கி வரலாறு படைத்த இந்திய அணிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. இந்திய ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்களது மகிழ்ச்சியை வெறித்தனமாக வெளிப்படுத்தி வருகின்றனர்.