சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வேணுகோபால் ராவ் தனது கிரிக்கெட் வாழ்வில் மறக்க முடியாத தருணங்கள் எது என கூறியுள்ளார்.
டிராவிட் கேப்டன் பொறுப்பில் இருந்தபோது 2006ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமாகி, 16 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடிய ஆந்திர வீரர் வேணுகோபால் ராவ்.
37 வயது வேணுகோபால் ராவ், இதுவரை 121 உள்ளூர் முதல்தர போட்டிகளில் ஆடி இருக்கிறார். 2017ஆம் ஆண்டிற்கு பிறகு எம் ஆர் எஃப் நிறுவனத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு, கார்ப்பரேட் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே ஆடி வந்தார்.
இந்திய அணியின் அப்போதைய பயிற்சியாளராக இருந்த கிரேக் சேப்பல், இவருடைய ஆட்டத்தைக் கவனித்து அன்றைய தேர்வுக்குழு அதிகாரிகளுக்கு தனிப்பட்ட முறையில் பரிந்துரை செய்ததால், இந்திய அணிக்கு வேணுகோபால் ராவ் ஆடுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
இறுதியாக, 2006-ல் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் ஆடினார். அதன்பிறகு, முதல் தர போட்டிகளில் தொடர்ந்து 2017 வரை ஆடி வந்தார்.
இந்நிலையில் இன்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வேணுகோபால் ராவ் அறிவித்தார். அப்போது தனது கிரிக்கெட் வாழ்வில் மறக்க முடியாத தருணம் எது என கூறினார். அதில் 2005 ஆம் ஆண்டு இங்கிலாந்து ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது இந்திய ஏ அணி 501 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருக்கும் போது, தான் 228 ரன்கள் அடித்ததே தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாக அமைந்தது என குறிப்பிட்டார்.
ஐபிஎல் தொடரில் 2009ஆம் ஆண்டு கோப்பையை வென்ற டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் வேணுகோபால் ராவ் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு 2014ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஆடியதே கடைசிஐபிஎல் தொடராக இருந்தது.