இவர போய் விட்டுட்டீங்களேடா… மிகப்பெரும் உலக சாதனை படைத்த தமிழக வீரர் ஜெகதீஷன்
தமிழகத்தை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான நாரயணன் ஜெகதீசன் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் மிகப்பெரும் உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
உள்ளூர் ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே தொடர் கடந்த 12ம் தேதி துவங்கியது. மொத்தம் 136 ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த தொடர் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் சி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு – அருணாச்சல பிரதேசம் இடையேயான போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற அருணாச்சல பிரதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு சாய் சுதர்சனும், நாராயணன் ஜெகதீசனும் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.
போட்டியின் துவக்கத்தில் இருந்தே அருணாச்சல பிரதேச அணியின் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்ட தமிழக அணியின் துவக்க வீரர்கள், மளமளவென ரன்னும் குவித்தனர். இதில் குறிப்பாக கடந்த நான்கு போட்டிகளிலும் சதம் அடித்திருந்த நாராயணன் ஜெகதீசன் இந்த போட்டியில் 79 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக ஐந்து சதங்கள் அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமைக்கு ஜெகதீசன் சொந்தக்காரராகியுள்ளார். இதற்கு முன் உலகின் எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் தொடர்ச்சியாக ஐந்து சதங்கள் அடித்து இல்லை.
விராட் கோலி, ப்ரித்வி ஷா மற்றும் தேவ்தட் படிக்கல் ஆகியோர் தொடர்ச்சியாக நான்கு சதங்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது இதனை ஜெகதீஷன் முறியடித்து மிகப்பெரும் வரலாற்றில் இடம்பெற்றுள்ளார்.
அதே போல் விஜய் ஹசாரே தொடரின் ஒரே சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர், இரட்டை சதம் அடித்த இரண்டாவது வீரர் என பல சாதனைகளையும் ஜெகதீசன் இந்த போட்டியின் மூலம் பெற்றுள்ளார்.
கடந்த சில வருடங்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த ஜெகதீசனுக்கு ஆடும் லெவனில் சரியான வாய்ப்பே கொடுக்கப்படவில்லை என்பதும், அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
அருணாச்சல பிரதேச அணிக்கு இமாலய இலக்கு;
சாய் சுதர்சன் 102 பந்துகளில் 154 ரன்களும், ருத்ரதாண்டவம் ஆடிய ஜெகதீசன் 141 பந்துகளில் 15 சிக்ஸர் மற்றும் 24 பவுண்டரிகளுடன் 277 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் வெறும் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்த தமிழக அணி 506 ரன்கள் குவித்துள்ளது.