டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மாவை முந்தினார் விராட் கோலி.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 2வது டி20 போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
ஆரம்பத்தில் அதிரடி காட்டிய இந்திய அணி, பின்னர் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால், 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டு இழப்பிற்கு 170 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய சிவம் 54 (30) ரன்கள் எடுத்தார்.
இரண்டாவது பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கம் முதலே அதிரடி காட்டியது. 70 ரன்கள் வரை விக்கெட்டை பறிகொடுக்காமல் விளையாடியது. 40 (35) ரன்கள் எடுத்து எவின் லெவிஸ் விக்கெட்டை இழக்க, பின்னர் வந்த ஹெட்மெயர் 14 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தொடக்க ஆட்டக்காரரான சிம்மன்ஸ் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். அவருடன் ஜோடி சேர்ந்த நிகோலஸ் பூரானும் அதிரடி காட்டினார்.
இதனால், 18.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெஸ்ட் இண்டீஸ் அணி எளிமையாக வென்றது. இதன்மூலம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என வெஸ்ட் இண்டீஸ் அணி சமன் செய்தது.
டி20 சர்வதேச போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர்களில் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் மாறிமாறி முதலிடத்தை பிடித்து வந்தனர். வங்காளதேசத்துக்கு எதிரான தொடரில் கோலி விளையாடாததால் ரோகித் சர்மா அவரை முந்தினார்.
தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரோகித் சர்மாவின் ஆட்டம் அதிரடியாக அமைய வில்லை. இதனால் கோலி அவரை முந்தி மீண்டும் முதலிடத்தை பிடித்தார்.
கோலி 2563 ரன்களுடன் முதலிடத்திலும், ரோகித் சர்மா 2562 ரன்களுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். மும்பையில் நடைபெறும் ஆட்டத்தில் இந்த நிலைமை மாறும்.