100 சதவீத உடற்தகுதியுடன் உள்ளேன்; கேப்டன் விராட் கோஹ்லி
கழுத்தில் ஏற்பட்ட காயம் முழுமையாக குணமடைந்து விட்டதாகவும், இங்கிலாந்து அணியுடனான தொடரில் விளையாடுவதற்கு தான் பூரண உடற்தகுதியுடன் உள்ளதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செல்லும் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து அணியுடன், 3 டி-20, 3 ஒருநாள், 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டி-20 போட்டி, ஜூலை 3ம் தேதி மான்செஸ்டரில் துவங்குகிறது.
அதற்கு முன்னதாக இந்திய அணி அயர்லாந்து அணிக்கு எதிராக (ஜூன் 27, 29ம் தேதி) இரண்டு டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இந்திய அணி கடையாக (2007, 2011, 2014) மூன்று முறை இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு பின் முதல் முறையாக முதலில் டெஸ்ட் போட்டிகளில் இல்லாமல் ஒரு நாள், டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
தவிர, எப்போதும் அந்நிய மண்ணில் போட்டிகளுக்கு செல்லும் இந்திய அணி, பயிற்சி போட்டியில் பங்கேற்பது வழக்கம், ஆனால் வரலாற்றிலேயே முதல் முறையாக எவ்வித பயிற்சி போட்டியும் இல்லாமல் இங்கிலாந்துக்கு எதிராக கோலி தலைமையிலான இந்திய அணி களமிறங்கவுள்ளது. இதனால் இந்திய அணி அந்நிய மண்ணில் சாதிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்காக டெல்லியில் இருந்து புறப்பட்ட கேப்டன் கோலி கூறுகையில், ‘ இங்கிலாந்தில் பந்து அதிகமாக சுவிங்காவது இந்தியாவுக்கு மட்டுமல்ல எல்லா அணிகளும் சந்திக்கும் பிரச்சனை தான். ஆனால் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டால், சாதிக்க முடியும்.
தற்போது நான் 100 சதவீதம் குணமடைந்து விட்டேன். கழுத்து சிறப்பாக உள்ளது. மும்பையில் பயிற்சியில் ஈடுபட்டேன். இப்படி கிடைக்கும் ஓய்வு மனதளவில் தயாராக சிறப்பானது” என்றார்.