சச்சின் டெண்டுல்கரை விட கோஹ்லி சிறந்த வீரர்; கங்குலி புகழாரம்
ஒருநாள் மற்றும் டி.20 போட்டிகளில் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரை விட தனது பார்வையில் கோஹ்லி சிறந்த வீரராக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் ஆறு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரில் டர்பனில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய இந்திய அணிக்கு, கோஹ்லி அசத்தல் சதம் அடித்து கை கொடுத்ததன் மூலம் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்திய அணியை தொடர்ந்து வெற்றிப்பாதையில் கம்பீரமாக வழிநடத்தி வரும் கோஹ்லி, சச்சினை விட சிறந்து விளங்குவதாக கங்குலி புகழாரம் சூட்டியுள்ளார்.
இது குறித்து பேசிய கங்குலி “தென் ஆப்ரிக்கா அணியுடன் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் வெற்றி ஆச்சரியமானது. கோஹ்லி மட்டும் தனது பொறுப்பை உணர்ந்து விளையாடமல் இருந்திருந்தால், இந்திய அணி தோல்வியடையும் நிலை ஏற்பட்டிருக்கும். டர்பன் மைதானத்தில் சதம் அடிப்பது சாதரண விசயம் அல்ல. ஒவ்வொரு போட்டியிலும் கோஹ்லியின் முன்னேற்றம் மகிழ்ச்சியை தருகிறது.
நான் சச்சினுடன் ஒன்றாக விளையாடி இருக்கிறேன். என்னை பொறுத்தவரையில் ஒருநாள் மற்றும் டி.20 போட்டிகளில் சச்சினை விட கோஹ்லி சிறந்த வீரராக திகழ்கிறார். இதற்கான காரணம் எதுவும் எனக்கு தெரியவில்லை. எனது பார்வையில் கோஹ்லி ஆகச்சிறந்த வீரர். கோஹ்லியின் சாதனைகளுக்கு வானம் தான் எல்லையாக இருக்கும் என்பது போல் ஒவ்வொரு போட்டியிலும் சாதனைகளை குவித்து வருகிறார். பார்ப்போம் காலம் அவருக்கு இன்னும் எவ்வளவு வருடங்கள் வழிவிடுகிறது என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் கங்குலி.