“அவர் எங்கள் சொத்து” என பாராட்டும் இந்திய கேப்டன் விராட் கோலி ! டி20 உலகக் கோப்பை தொடருக்கு தயாராகப்போகும் தமிழகத்தின் தங்கம் நடராஜன் !
சேலத்தைச் சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் தங்கராசு நடராஜன் தற்போது இந்திய அணியின் முக்கிய வீரர் ஆகிவிட்டார். 2016ஆம் ஆண்டு டிஎன்பிஎல் தொடர் மூலம் அறிமுகமாகி அந்த தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டதன்மூலம் சேவாக்கின் கவனத்தை தன் பக்கம் திருப்பியவர் நடராஜன்.
அதன்பின்னர் விரேந்திர சேவாக் 2017 ஆம் ஆண்டு ஆலோசகராக இருந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 3 கோடி ரூபாய் கொடுத்து எடுத்தார். அந்த வருடம் ஒரு சில போட்டிகளில் மட்டுமே ஆடினார். தங்கராசு நடராஜனுக்கு அந்த வருடம் காயம் ஆகிவிட்டது. இதன் காரணமாக அவரால் சரியாக விளையாட முடியவில்லை. அதன் பின்னர் 2020 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார்.
குறிப்பாக அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர் இவர் மீது முழு நம்பிக்கை வைத்து 16 போட்டிகளிலும் ஆட வைத்தார். அதனை மெய்ப்பிக்கும் வகையில் 16 விக்கெட்டுகள் எடுத்தார் நடராஜன். விராட் கோலி, மகேந்திர சிங் தோனி, ஏபி டிவில்லியர்ஸ் போன்ற ஜாம்பவான்களின் விக்கெட்டுகளையும் சாய்த்து தனது முழு திறமையை நிரூபித்தார்.
இதன் காரணமாக விராட் கோலியின் கவனத்தை தன் பக்கம் இழுத்து இந்திய அணியிலும் இடம் பிடித்தார். அடுத்தடுத்து ஒருநாள் அணியிலும் டி20 அணியிலும் இடம் பெற்று தற்போது கலக்கிக் கொண்டிருக்கிறார். ஒரு நாள் போட்டியில் விளையாடிய நடராஜன் முதல் போட்டியிலேயே 2 விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். அதன் பின்னர் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடி 3 விக்கெட் வீழ்த்தி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இந்த போட்டி முடிந்த பின்னர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நடராஜனை வெகுவாக பாராட்டினார். மற்ற வீரர்களை விட இவர் பெயரை சொல்லி பாராட்டிய அவர் ‘இந்திய அணியின் சொத்து’ என்றும் கூறினார். அதனை தாண்டி நடராஜனிடம் இந்திய அணிக்கு தேவையான பல திறமைகள் இருக்கிறது என்றும் அவர் தொடர்ந்து தன்னை மேம்படுத்திக் கொண்டே இருக்கிறார் என்றும் தெரிவித்திருக்கிறார்.
வாய்நிறைய நடராஜனை புகழ்ந்த விராட் கோலி இனி அவர் இந்திய அணியின் சொத்து என்றும் பாராட்டியிருக்கிறார். இப்படி பார்த்தால் 2022ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை டி20 தொடருக்கு இவர் அணியில் இடம் பெறுவார் என்பது உறுதியாகிவிட்டது.