வெலிங்டனில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 165 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அடுத்து களம்கண்ட நியூசிலாந்து அணி 348 ரன்கள் எடுத்தது. 183 ரன்கள் பின்தங்கிய நிலையில் களம் கண்ட இந்திய 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் முக்கிய 4 விக்கெட்களை இழந்து 144 ரன்கள் எடுத்திருந்தது.
இதனையடுத்து 4ஆம் நாள் ஆட்டத்தை ரஹானே, விஹாரி இணை தொடங்கியது. இன்றைய ஆட்டத்தின் போல்ட் வீசிய 3ஆவது ஓவரில், களத்தில் நின்று நம்பிக்கை அளித்துக்கொண்டிருந்த ரஹானே 29 ரன்னில் ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து விஹாரி 15 ரன்னிலும், அஸ்வின் 4 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்திய அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 9 ரன் எடுத்தால் வெற்றி என எளிதான இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 2 ஆவது ஓவரிலேயே வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இப்போட்டியில் 9 விக்கெட்களை கைப்பற்றிய நியூசிலாந்து அணியின் டிம் சவுதி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தொடர்ந்து 7 போட்டிகளில் வெற்றிபெற்று வீறுநடைபோட்டு வந்த இந்திய அணி இப்போட்டியில் தோல்வி கண்டுள்ளது.
தோல்விக்குப் பிறகு இந்திய அணி கேப்டன் பேட்டியளித்ததாவது:
வீரர்கள் மீது கடுமையாக நடந்துகொள்ளவேண்டியதில்லை. வெளிநாட்டில் இதுவரை 2 இன்னிங்ஸ் மட்டுமே விளையாடியுள்ளார் பிரித்வி ஷா. நன்றாக விளையாடி ரன்கள் சேர்ப்பது எப்படி என்பதை அவர் கண்டறிந்துகொள்வார். இயற்கையிலேயே அதிரடியாக விளையாடக் கூடியவர். அதிக ரன்கள் எடுப்பதற்கான வழியைக் கண்டுபிடித்து இந்திய அணிக்கு நிச்சயம் இனி நல்ல தொடக்கத்தை அளிப்பார் என்று கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: மயங்க் அகர்வால் இந்த டெஸ்டில் பிரமாதமாக விளையாடினார். இரு இன்னிங்ஸிலும் பக்குவமாக விளையாடினார். பேட்டிங்கில் அவரும் ரஹானேவும் மட்டும்தான் ரன்கள் எடுத்து நீண்ட நேரம் விளையாடினார்கள். எங்கு விளையாடுகிறோம், ஆடுகளம் எவ்வாறு உள்ளது என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் வழக்கமாக எப்படி விளையாடி வெற்றி பெறுவோமோ அப்படி விளையாட முயலவேண்டும். நிறைய ரன்கள் எடுத்து பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமான நிலையை உருவாக்கினால் பிறகு அவர்கள் தங்கள் வேலையைப் பார்த்துக்கொள்வார்கள். இது இந்த டெஸ்டில் நடக்கவில்லை என்பதால் பேட்ஸ்மேன்கள் இன்னும் அதிகப் பொறுப்பேற்கவேண்டும் என்றார்.
முதல் டெஸ்டில் இரு இன்னிங்ஸிலும் 16, 14 ரன்கள் எடுத்தார் பிரித்வி ஷா.
2-வது டெஸ்ட், பிப்ரவரி 29 அன்று தொடங்குகிறது.