வரலாறு படைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் விராட் கோலி தென்ஆப்பிரிக்கா வருவார் என்று அதிரடி மன்னன் டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.
இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 5-ந்தேதி கேப் டவுனில் தொடங்குகிறது. இந்திய அணி இதுவரை தென்ஆப்பிரிக்கா மண்ணில் தொடரை கைப்பற்றியது கிடையாது. தற்போது இந்திய அணி சுமார் இரண்டு ஆண்டுகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், முதன்முறையாக தென்ஆப்பிரிக்கா மண்ணில் இந்திய அணி வெற்றி பெற வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுப்பதற்காக டி வில்லியர்ஸ் மீண்டும் டெஸ்ட் போட்டிக்கு திரும்பியுள்ளார். அதேபோல் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயினும் டெஸ்ட் போட்டியில் களம் இறங்க இருக்கிறார்.
இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா மண்ணில் வரலாறு படைக்க வேண்டும் எண்ணத்தோடுதான் விராட் கோலி இங்கே வருவார் என டி வில்லியர்ஸ் கூறியுள்ளார். இதுகுறித்து டி வில்லியர்ஸ் கூறுகையில் ‘‘விராட் கோலி கேப்டனாக எவ்வளவு உறுதியாக இருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் எப்படியாவது வெற்றி பெற வேண்டும், வரலாறு படைக்க வேண்டும் என்ற உறுதியோடுதான் இங்கே வருவார்’’ என்றார்.