பல வருடங்கள் கழித்து இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் இடத்தை பிடித்தார் ஹர்டிக் பாண்டியா. தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் அவர் அட்டகாசமாக விளையாடி 93 ரன் அடித்து அணியை காப்பாற்றினார். ஆனால், அதன் பிறகு விளையாடிய நான்கு இன்னிங்சில் வெறும் 22 ரன் மட்டுமே அடித்திருக்கிறார். முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 2 விக்கெட் எடுத்த ஹர்டிக் பாண்டியா, அதன் பிறகு விளையாடிய நான்கு இன்னிங்சில் விக்கெட் எடுக்க திணறி வருகிறார்.
தேவையில்லாத ஷாட்டுகளை விளையாடி அவரது விக்கெட்டுகளை பறிகொடுக்கிறார் ஹர்டிக் பாண்டியா. மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி ரன் அடிக்க திணறிய போது, தேவையில்லாத ஷாட் அடித்து அவுட் ஆனார் ஹர்டிக் பாண்டியா. முதல் இன்னிங்சில் இந்திய அணி 187 ரன்னுக்கு சுருண்டது. இதனால், அணியில் ஹர்டிக் பாண்டியவை சேர்ப்பதை பற்றி கேள்விகள் எழுகின்றன.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் விரேந்தர் சேவாக் இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்டிக் பாண்டியாவிற்கு சப்போர்ட் செய்துள்ளார். டெஸ்டில் நீண்ட காலம் விளையாடவேண்டும், கண்டிப்பாக சில வருடங்கள் டெஸ்ட் போட்டியில் விளையாடினால் தான் டெஸ்ட் போட்டியின் நல்ல கிரிக்கெட் வீரராக வளர முடியும் என சேவாக் கூறியிருக்கிறார்.
“கண்டிப்பாக, இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்டிக் பாண்டியா நீண்ட நாள் விளையாட வேண்டும். அவரது பேட்டிங் அட்டகாசமாக இருக்கிறது, ஆனால் அவர் தொடர்ந்து அந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அப்படி அது நடக்கவில்லை என்றால், அது .மிக பெரிய ஏமாற்றம் ஆகும். ஆனால், ஒரு கிரிக்கெட்டராக வளருவதற்கு அவருக்கு நேரம் எடுத்து கொள்ளும். அவர் இப்போது தான் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கியுள்ளார், கபில் தேவ் போல் வளர அவருக்கு கண்டிப்பாக சில வருடங்கள் தேவை,” என சேவாக் கூறினார்.