இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு அடிமேல் அடி விழுந்து வருகிறது.
முதல் மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றதோடு 3-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி விட்டது.
இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி இந்திய அணி முதலில் பந்து வீசியது. கடந்த போட்டிகளை போல் இல்லாமல் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து இந்திய பந்து வீச்சை நாலாபுறமும் ஆஸ்திரேலிய துவக்க ஆட்டக்காரர்கள் சிதறடித்தனர். குறிப்பாக இன்றைய போட்டியின் மூலம் 100-வது சர்வதேச போட்டியில் விளையாடும் டேவிட் வார்னர் ஆட்டத்தில் அனல் பறந்தது.
அபாரமாக விளையாடிய டேவிட் வார்னர் தனது 100-வது போட்டியில் சதம் அடித்தார். சர்வதேச போட்டிகளில் டேவிட் வார்னர் அடித்த 14 வது சதம் இதுவாகும். 119 பந்துகளில் 12 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் உட்பட 124 ரன்கள் அடித்த டேவிட் வார்னர், கேதர் ஜாதவ் பந்தில் ஆட்டமிழந்தார்.
100 ஒருநாள் போட்டிகள் ஆடிய நிலையில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியள் :
-
ஹசிம் அம்லா – 16 சதங்கள்
-
டேவிட் வார்னர் – 14 சதங்கள்
-
விராட் கோலி – 13 சதங்கள்
இதன் மூலம் விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார் டேவிட் வார்னர்.
இறுதியில், ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி சார்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டும், கேதர் ஜாதவ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இந்த போட்டியில் உமேஷ் யாதவ் தனது 100வது விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து 335 ரன்களை இலக்காக கொண்டு இந்திய அணி விளையாடி வருகிறது.