ஐ.பி.எல் தொடரில் கற்றுக்கொண்ட பாடம் இங்கிலாந்து தொடரில் கைகொடுக்கும்; வாசிங்டன் சுந்தர்
ஐ.பி.எல் தொடரில் கிடைத்துள்ள அனுபவமும், பாடமும் இங்கிலாந்து தொடரில் சிறப்பாக செயல்பட நிச்சயம் உறுதுணையாக இருக்கும் என்று தமிழக வீரர் வாசிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் இடம்பிடித்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த சுழல் பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தர், ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக ஆடினார். அந்த பிளே ஆப் சுற்றுக்கு அந்த அணி தேர்வாகவில்லை. இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் கிடைத்தது சிறப்பான அனுபவம் என்று அவர் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறும்போது, ’ஆடும் லெவனில் இருப்பதும் இல்லாததும் பிரச்னை இல்லை. அணி தேர்வைப் பொறுத்தது அது. நான்கு வெளி நாட்டு வீரர்கள், அணி கலவை ஆகியவற்றைப் பொறுத்தே வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது எனக்கு ஏமாற்றத்தை அளிக்கவில்லை. இது போன்ற நீண்ட தொடரில் நிறைய கற்றுக்கொள்ள முடியும். நானும் கற்றுக்கொண்டிருக்கிறேன்.
விராத் கோலி தலைமையின் கீழ் விளையாடியது சிறப்பாக இருந்தது. கேப்டனாக அவர் பல விஷயங்களைச் சொன்னார். அதன்படி பந்து வீசினேன். அவரிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக்கொண்டேன். கடந்த வருடம் தோனியுடன் (புனே அணி) விளையாடினேன். மூத்த வீரர்க ளுடன் விளையாடும்போது எவ்வளவு முடியுமோ அவ்வளவு கற்றுக்கொள்ள முடியும். அடுத்த மாதம் இங்கிலாந்தில் நடக்கும் தொடருக்குத் தேர்வாகி இருக்கிறேன். இதற்கு முன் அங்கு நான் விளையாடியதில்லை. அங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்ப பந்துவீசுவதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். அதற்காக வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபட மாட்டேன்’ என்றார்.