இலங்கை அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், மோசமான பீல்டிங்கினால் வெற்றியை இழந்து விட்டோம் என்று புஜாரா தெரிவித்துள்ளார்.
இலங்கை அணிக்கு எதிராக டெல்லியில் நடந்த 3-வது மற்றும் கடைசி டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இலங்கை அணி கடுமையாக போராடி தோல்வியை தவிர்த்து ‘டிரா’ செய்தது.
4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய பந்து வீச்சாளர்களால் கடைசி நாளில் எஞ்சிய 7 விக்கெட்டை கைப்பற்ற முடியாமல் போனது பரிதாபமே. இந்திய பந்து வீச்சாளர்களால் மேலும் 2 விக்கெட் மட்டுமே கைப்பற்ற முடிந்தது.
தனஞ்ஜெயா டி சில்வா சதம் அடித்து இந்தியாவின் வெற்றியை தடுத்தார். 6-வது விக்கெட்டான ரோசன் சில்வாவும், டிக்வெலாவும் சிறப்பாக விளையாடி இலங்கை அணியை காப்பாற்றினர்.
டெஸ்ட் ‘டிரா’ ஆனது குறித்து இந்திய வீரர் புஜாரா நிருபர்களிடம் கூறியதாவது:-
எங்களது பீல்டிங் சரியாக இல்லை. பல கேட்சுகளை தவறவிட்டோம். மோசமான பீல்டிங்கினால் இந்த டெஸ்டில் வெற்றியை இழந்தோம். இதை ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும்.
பீல்டிங்கில் நாங்களும் இன்னும் முன்னேற்றம் அடைய கடுமையாக பயிற்சி பெற வேண்டும். ஒவ்வொரு கேட்சும் முக்கியமானது. ‘சிலிப்’ கேட்சுகளை தவறவிடுவது சரியானதல்ல. இதை எப்படி நழுவ விட்டோம் என்று புரியவில்லை.
இந்த தொடரில் எங்களது வீரர்கள் சிறப்பாகவே பந்து வீசினர். கடைசி 2 நாட்களில் ஆடுகள தன்மை மாறிவிட்டது. இதனால் சுழற்பந்து வீரர்களுக்கு பிட்ச் கைகொடுக்கவில்லை.
தென்னாப்பிரிக்கா தொடரில் ‘சிலிப்’ கேட்சுக்கு முக்கியத்துவம் கொடுத்து பயிற்சி பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.