சமீபத்தில் இந்திய அணி பெற்ற வெற்றிகள், அன்னியமண்ணிலும் தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது,” என, இந்தியாவின் ரோகித் சர்மா தெரிவித்தார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. இரு அணிகள் மோதும் முதல் போட்டி, நாளை டர்பனில் நடக்கவுள்ளது. இதுகுறித்து இந்திய அணி துணைக் கேப்டன் ரோகித் சர்மா கூறியது:
பொதுவாக டெஸ்ட் போட்டியில் இப்படித் தான் விளையாட வேண்டும் என, திட்டமிடுவது இல்லை. ஒருநாள், ‘டுவென்டி-20’ என, எவ்வகை போட்டியாக இருந்தாலும், ஒரே மாதிரி தான் பேட்டிங் செய்கிறேன். சில நேரங்களில் இது சரியாக வரும். சில நேரங்களில் சொதப்பி விடும். மற்றபடி, ஒவ்வொரு கிரிக்கெட்டும் என, பேட்டிங்கில் பெரியளவில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
டெஸ்ட் தொடர் முடிந்து விட்டதால், இதுகுறித்து அதிகம் பேச விரும்பவில்லை. வரும் ஒருநாள் தொடரில் வெற்றி பெற வேண்டும். இதில் ஒவ்வொரு வீரரும் முக்கிய பங்குள்ளது. கடந்த முறை இங்கு வந்த போது, வீரர்கள் அன்னிய மண்ணில் அதிகம் விளையாடிய அனுபமில்லாமல் இருந்தனர்.
இப்போது மாறிவிட்டது. டெஸ்ட் தொடரில் எங்களது பவுலர்கள், எதிரணியின் 60 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்தனர். இதனால், ஒருநாள் தொடரில் அவ்வளவு எளிதாக விட்டுத் தர மாட்டோம். டர்பனில் இதற்கு முன் இந்தியா மோசமாக விளையாடி இருக்கலாம்.
இம்முறை நிறைய மாற்றம் ஏற்பட்டுள்ளது. முதல் 10 ஓவரில் மோசமாக செயல்பட்டாலும், எளிதாக மீண்டு வர முடியும். சாம்பியன்ஸ் டிராபி தொடர் முதல், கடந்த ஆறு, ஏழு மாதங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம்.
சொந்தமண்ணில் இந்திய அணி பெற்ற வெற்றிகள், அன்னிய மண்ணிலும் தொடர விரும்புகிறோம். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு, அணியின் வெற்றிக்கு கைகொடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.