முதலாவது தகுதிச்சுற்று போட்டியில் 20 ரன் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட். முதலில் பேட்டிங் ஆடிய புனே அணி 162 ரன் எடுத்தது, அந்த இன்னிங்சின் கடைசியில் தல தோனி அங்கிருந்த ரசிகர்களுக்கு வாணவேடிக்கை காட்டினார்.
அந்த வெற்றியால் புனே அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. தற்போது அனைவரின் கவனமும் வெளியேறுதல் மற்றும் 2வது தகுதிசுற்று போட்டியில் தான்.
வெளியேறுதல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன. இதில் வெற்றி பெரும் அணி 2வது தகுதிச்சுற்று போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளும். இந்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டி ஆகும், ஆனால் இந்த போட்டிகள் மழையால் பாதிக்கப்படும் என தெரிகிறது.
பெங்களுருவில் நேற்று மாலையில் இருந்து கனமழை. இன்றும் மழை கொட்டுகிறது. இதனால் இந்த போட்டி மழையால் பாதிக்க வாய்ப்பு உள்ளது. அப்படி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன ஆகும்?
அப்படி இந்த போட்டி விளையாடவில்லை என்றால், ஐதராபாத் அணி 2வது தகுதிச்சுற்று போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர் கொள்ளும். கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளதால், ஐதராபாத் அணியே அடுத்த சுற்றுக்கு செல்லும்.
அடுத்த போட்டியான 2வது தகுதிச்சுற்று போட்டியும் மழையால் பாதிக்கப்பட்டால், முதல் தகுதிச்சுற்று போட்டியில் தோல்வியை கண்ட மும்பை இந்தியன்ஸ் அணியே இறுதி போட்டிக்கு தகுதி பெரும்.
இந்த இரண்டு போட்டியும் மழையால் பாதிக்கப்பட்டால், இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிகள் மோதும். பெங்களுருவில் மழை கொட்டிவருவதால், இதன் காரணமாக இரண்டு போட்டிகளும் பாதிக்க வாய்ப்புள்ளது.