இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. அடுத்து நடைபெற்ற ஒருநாள் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது இங்கிலாந்து அணி. இதைத்தொடர்ந்து டெஸ்ட் தொடரில் இந்தியா-இங்கிலாந்து விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வியடைந்தது.
இந்தப் போட்டியில் இந்திய அணி எளிமையான இலக்கை எதிர்த்து விளையாடியபோதிலும் தோல்வியை தழுவியது. இந்திய பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடவில்லை என்றாலும், இங்கிலாந்து அணியின் பந்துவீச்சும் சவாலாக தான் இருந்தது. ஆனால் இந்திய அணி ஒரு சவாலான பந்துவீச்சை இங்கிலாந்திற்கு வழங்கியது என்றால், அது அஸ்வினால் தான் சாத்தியம். ஏனென்றால் அவரது சுழலில் இங்கிலாந்து சுருண்டது. இந்தப் போட்டியில் மேலும் ஒரு சுழல் பந்துவீச்சாளர் இருந்தால், இந்தியா வெற்றி பெற்றிருக்கும் என்று பலரும் கூறினர். குறிப்பாக குல்தீப் யாதவ் இருந்தால் சிறப்பு என்ற விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் பேட்டியளித்து இந்திய கேப்டன் விராட் கோலி, “இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் போது ஒரு ஒற்றுமையான அணியை நாம் உணர்ந்தேன். இதில் யாரையும் தனிப்பட்ட வகையில் குறிப்பிட்டு கூறவில்லை. அணியே சேர்ந்து போராடியது. தோல்வியடைந்த போது தான், மொத்த அணியும் எத்தனை ஒற்றுமையுடன் போராடியது என்பதை உணர்ந்தேன். பொதுவாக அணியில் ஆல்ரவுண்டர்கள் பந்து வீசுகின்றனர். சிறப்பான பேட்டிங்கையும் வெளிப்படுத்துகின்றனர். இருப்பினும் விக்கெட்டுகள் விழுவதில் கடினமான சூழல் ஏற்படும்போது சுழல் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். அவர்களின் தேவை மிகவும் முக்கியமானது. தற்போது ஒரு சுழல் பந்து வீச்சாளர் உள்ளார். அவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
இதற்காக, வேகப்பந்துவீச்சாளர்களில் உமேஷ் யாதவ் வெளியேற்றப்படலாம் எனத் தெரிகிறது. சுழற் பந்துவீச்சாளர்களில் அஸ்வினுடன், ரவீந்திர ஜடேஜா அல்லது குல்தீப் யாதவ் ஆகியோரில் ஒருவர் சேர்க்கப்படலாம். இதில், 2014-இல் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலுமாக 3 விக்கெட்டுகள் வீழ்த்திய ஜடேஜா, 2-ஆவது இன்னிங்ஸில் 68 ரன்களும் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார்.அதேவேளையில், குல்தீப் யாதவின் பந்து வீச்சை எதிர்கொள்ள இங்கிலாந்து வீரர்கள் ஏற்கெனவே டி20, ஒரு நாள் போட்டிகளில் தடுமாறியதால் அவரை அணியில் சேர்ப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
இங்கிலாந்து அணியைப் பொருத்த வரையில், டேவிட் மலான் அணியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், பென் ஸ்டோக்ஸ் வழக்கு விசாரணை காரணமாக இப்போட்டியில் இடம்பெறவில்லை. சுழற்பந்து வீச்சாளர் ஆலிவர் போப், முதல் முறையாக சர்வதேச போட்டியில் களம் காண்கிறார். பென் ஸ்டோக்ஸுக்குப் பதிலாக, மொயின் அலி அல்லது கிறிஸ் வோக்ஸ் பிளேயிங் லெவனில் ஆடவுள்ளனர். இதனையடுத்து இன்று தொடங்கும் இரு அணிகளுக்கு இடையிலான போட்டி சவால்கள் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.