எனக்கு தொல்லை கொடுத்த ஒரே ஒரு பந்துவீச்சாளர் இவர் தான்; யுவராஜ் சிங் ஓபன் டாக்
தான் கிரிக்கெட் விளையாடி காலத்தில் தனக்கு சவாலாக இருந்த பந்துவீச்சாளர்கள் யார் என்பது குறித்து யுவராஜ் சிங் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஸ்போர்ட்ஸ்டார் இதழுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறும்போது,
“நான் ஐபிஎல் இல்லாத போது 2000-ம் ஆண்டில் வந்தேன். நான் எனக்கு ஆதர்சமான வீரர்களை தொலைக்காட்சியில் பார்த்து வளர்ந்தேன் ஒருநாள் அவர்களுக்கு அருகிலேயே வீரராக அமர்ந்தேன். அவர்களிடமிருந்து ஏகப்பட்டதைக் கற்றுக் கொண்டேன், அவர்கள் மீது ஏகப்பட்ட மரியாதை எனக்கு எப்போதும் உண்டு.
அவர்களிடமிருந்துதான் எப்படி நடந்து கொள்வது, மீடியாவிடம் எப்படி பேசுவது ஆகியவற்றைக் கற்றுக் கொண்டேன். இன்று மூத்த வீரர்களே அணியில் இல்லை, அனைவரும் சம வயதுடையவராக உள்ளனர்.
இன்று இளம் வீரர்க்ளுக்கு பணமழை ஐபிஎல் ஒப்பந்தங்கள் கிடைத்து விடுகின்றன, இந்தியாவுக்காக ஆடும் முன்னரே ஐபிஎல் மூலம் பணம் கொழிக்க தொடங்குகின்றனர். அதனால் 4 நாட்கள் நடைபெறும் உள்நாட்டு கிரிக்கெட்டை அவர்கள் தேர்ந்தெடுப்பதில்லை. 4 நாள் கிரிக்கெட், டெஸ்ட் கிரிக்கெட் குறித்தான இவர்களது அணுகுமுறை மோசமாக உள்ளது.
நான் டெஸ்ட் கிரிகெட் ஆடியே தீருவேன் என்று பிடிவாதமாக இருந்தேன். 40 டெஸ்ட் போட்டிகளில் ஆடினேன். நான் உள்ளேயும் வெளியேயுமாக இருந்தேன் ஏனெனில் போட்டி அதிகமாக இருந்தது.
ஐபிஎல் பணமழை பொழிவதால் இளைஞர்களின் கவனத்தை திருப்பி விடுகிறது. இப்போதுள்ள வீரர்களைக் கூறவில்லை, ஆனால் இளம் வீரர்கள் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் மீது கவனம் செலுத்துகிறது. மாநிலங்களுக்கான 4 நாள் கிரிக்கெட்டில் ஆடுவதில்லை.
தொல்லை கொடுத்த பந்துவீச்சாளர்;
சவாலான பந்துவீச்சாளர் குறித்த கேள்விக்கு பதிலளித்த யுவராஜ் சிங், இலங்கை அணியின் முத்தையா முரளிதரனின் பந்துவீச்சை எதிர்கொள்ள ஒவ்வொரு போட்டியிலும் திணறியதாக தெரிவித்தார். அவர் பந்துவீச்சை எதிர்கொள்வது தனக்கு மிகப்பெரும் சவால் என்றும் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
அதே போல் ஆஸ்திரேலிய அணியின் கிளன் மெக்ராத்தின் பந்துவீச்சை எதிர்கொள்ளவதிலும் தனக்கு சிரமம் இருந்ததாகவும், ஆனால் கிளன் மெக்ராத்தின் பந்துவீச்சை அதிகமாக எதிர்கொள்ளும் வாய்ப்பு தனக்கு கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.