எதிர்வரும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது சமிக்கு வாய்ப்பு கிடைக்காது என்று பிசிசிஐ நிர்வாகி தெரிவித்துள்ளார்.
இன்னும் சில மாதங்களில் உலகக்கோப்பைத் தொடர் நடைபெற இருப்பதால் அதற்கான முன்னேற்பாடுகளை ஒவ்வொரு அணியும் செய்து வருகிறது.
இதில்,கடந்த டி.20 உலக்கக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல தகுதியான அணிகளில் முதன்மையான அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி, படு மோசமான தோல்விகளால் லீக் சுற்றை கூட தாண்ட முடியாமல் வெளியேறியது. இதனால் இந்த வருட இறுதியில் ஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெற இருக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை கட்டமைப்பதில் பிசிசிஐ., பெரும் முனைப்பு காட்டி வருகிறது.
கடந்த தொடரில் செய்த தவறுகளை மீண்டும் செய்துவிட கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் இந்திய அணி, சீனியர் வீரர்களை விட சமீபகாலமாக இளம் வீரர்கள் பலருக்கு போதிய வாய்ப்புகள் வழங்கி வருகிறது.
மேலும் இந்திய அணியில் பங்கேற்கும் வீரர்களை பிசிசிஐ மிகத் தீவிரமாக கண்காணித்து வருகிறது. குறிப்பாக பந்து வீச்சாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக இந்திய அணி கூடுதல் கண்காணிப்பை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் எதிர்வரும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் சீனியர் வேகப்பந்துவீச்சாளர் முகமது சமி இடம்பெற மாட்டார் என்று பிசிசிஐ நிர்வாகி ஒருவர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அந்த நிர்வாகி தெரிவித்ததாவது, எதிர்வரும் டி 20 உலகக் கோப்பை தொடரில் முகமது சமிக்கு தேர்வாளர்கள் வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள். அவர் இந்த டி20 தொடரில் சரிபட்டு வரமாட்டார் என்று நினைக்கிறார்கள், இதன் காரணமாக தேர்வாளர்கள் உலக கோப்பை தொடர் நடைபெறுவதற்கு முன் இளம் பந்துவீச்சாளர்களுக்கு அதிகப்படியான வாய்ப்புகளை கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளனர். தேர்வாளர்கள் புவனேஸ்வர் குமாரை நிச்சயம் தேர்ந்தெடுப்பார்கள், ஆனால் சமியை தேர்ந்தெடுக்கவே மாட்டார்கள் என்று அந்த நிர்வாகி தெரிவித்திருந்தார்.
இந்திய அணிக்காக மூன்று விதமான தொடரிலும் சிறப்பாக செயல்படும் சமியை தேர்வாளர்கள் கழட்டிவிட திட்டமிட்டிருப்பது ரசிகர்கள் மனதில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.