முதல்முறையாக ரஞ்சி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது விதர்பா அணி.!!

கர்நாடகத்துக்கு எதிரான ரஞ்சி அரையிறுதி ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக ரஞ்சி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது விதர்பா அணி.

 

ரஞ்சி கோப்பை அரை இறுதியில் கர்நாடக அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது விதர்பா அணி.

விதர்பா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரஜ்னீஷ் குர்பானி இந்தப் போட்டியில் அபாரமாக வீசி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளையும் 2-வது இன்னிங்சில் 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றி 12 விக்கெட்டுகளைச் சாய்த்து சாதனை வெற்றியைத் தீர்மானித்தார்.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் விதர்பா அணி முதல் இன்னிங்ஸில் 185 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக சர்வாதே 47, வாசிம் ஜாபர் 39 ரன்கள் எடுத்தனர். கர்நாடக அணி தரப்பில் மிதுன் 5 விக்கெட்களை கைப்பற்றினார்.

இதையடுத்து விளையாடிய கர்நாடகா முதல் இன்னிங்ஸில் 301 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. கருண் நாயர் 153, கவுதம் 73 ரன்கள் விளாசினர். விதர்பா அணி தரப்பில் ரஜ்னீஷ் குர்பானி 5, உமேஷ் யாதவ் 4 விக்கெட்கள் வீழ்த்தினர்.

116 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய விதர்பா 84.1 ஓவரில் 313 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. கணேஷ் சதீஷ் 81, சர்வாதே 55 ரன்கள் எடுத்தனர். கர்நாடக தரப்பில் ஸ்டூவர்வட் பின்னி, வினய் குமார் ஆகியோர் தலா 3 விக்கெட்கள் கைப்பற்றினர்.

 

இதைத் தொடர்ந்து 198 ரன்கள் இலக்குடன் பேட் செய்த கர்நாடக அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 43 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்தது. அகர்வால் 3, சமரத் 24, நிஷால் 7, கருண் நாயர் 30, ஸ்டூவர்ட் பின்னி 0, சிதரம்பரம் கவுதம் 24 , கிருஷ்ணப்பா கவுதம் 1 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

கேப்டன் வினய் குமார் 19, கோபால் 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர். கைவசம் 3 விக்கெட்கள் மட்டுமே இருக்க வெற்றிக்கு 87 ரன்கள் தேவை என்ற நிலையில் கர்நாடக அணி கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடியது. 8-வது விக்கெட்டுக்கு 37 ரன்கள் சேர்த்த நிலையில் வினய் குமார், ராஜ்னேஷ் குர்பானி பந்தில் ஆட்டமிழந்தார். வினய் குமார் 36 ரன்கள் எடுத்தார்.

 

அவர் ஆட்டமிழந்த போது அணியின் வெற்றிக்கு 57 ரன்கள் தேவையாக இருந்தது. 9-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய அபிமன்யு மிதுன், கோபாலுடன் இணைந்து நேர்த்தியாக பேட் செய்தார். இதனால் அந்த அணி வெற்றியை நோக்கி பயணித்தது. வெற்றிக்கு 9 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் அபிமன்யு மிதுன் (33) விக்கெட்டை ராஜ்னேஷ் குர்பானி வீழ்த்தினார்.

இதனால் ஆட்டத்தில் பரபரப்பு அதிகமானது. வெற்றிக்கு 6 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் ஸ்ரீநாத் அர்விந்த் (2), ராஜ்னேஷ் குர்பானி பந்தில் ஆட்டமிழந்தார். முடிவில் கர்நாடக அணி 59.1 ஓவரில் 192 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. கோபால் 24 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

5 ரன்கள் வித்தியாசத்தில் திகிலூட்டும் வகையிலான வெற்றியை பெற்றது விதர்பா அணி முதன் முறையாக ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ராஜ்னேஷ் குர்பானி 68 ரன்களை விட்டுக் கொடுத்து 7 விக்கெட்கள் வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸில் அவர், 5 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார். ஒட்டுமொத்தமாக 162 ரன்களை விட்டுக்கொடுத்து 12 விக்கெட்களை கைப்பற்றிய அவர், ஆட்ட நாயகனாக தேர்வானார்.

Editor:

This website uses cookies.