ஆடுகளம் கடினமானது, இன்னும் போட்டி முடியவில்லை – பயிற்சியாளர்கள் சொல்வீச்சு

 

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்கிறது. மழைக்காரணமாக காலை 9.30 மணிக்குப் பதில் மதியம் 1.30 மணிக்குத்தான் ஆட்டம் தொடங்கியது. ஏற்கனவே, ஈடன் கார்டன் ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்ற வகையில் மாற்றப்பட்டுள்ளது. இன்று மேகமூட்டமாக இருந்ததாலும், வெளிச்சத்திற்கான லைட் ஆன் செய்தததாலும் ‘ரெட்பால்’ வேகப்பந்து வீச்சுக்கு அபாரமாக ஒத்துழைத்தது.

இதை பயன்படுத்தி இலங்கை தொடக்க வேகப்பந்து வீச்சாளர் லக்மல் அபாரமாக பந்து வீசினார். அவர் 6 ஓவர்கள் வீசி ஒரு ரன்கள் கூட விட்டுக் கொடுக்காமல் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். லோகேஷ் ராகுல் (0), தவான் (8), கோலி (0) சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

இந்த பந்து வீச்சு தொடக்கம்தான், இன்னும் பந்து வீச்சு முடியவடையவில்லை என்று இலங்கை பயிற்சியாளர் ரத்நாயகே கூறியுள்ளார்.

இதுகுறித்து இலங்கை பயிற்சியாளர் ரத்நாயகே கூறுகையில் ‘‘இந்தியாவிற்கு வருமுன் நாங்கள் இழப்பதற்கு ஏதும் இல்லை. அதனால் எங்களது வீரர்கள் சவாலுக்கு தயாராகிவிட்டார்கள். லக்மல் பந்து வீச்சு நான் பார்த்த வகையில் மிகவும் சிறந்த ஸ்பெல். ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு அதிக அளவில் ஒத்துழைத்தது.

ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஆதரவாக இருக்கும். ஆனால், எங்களது வேலை முடிந்துவிடவில்லை. இது தொடக்கம்தான். 250 ரன்கள் அடிக்கலாம் என்று அவர்கள் நினைக்கலாம். நாங்கள் 200 ரன்கள் என்று சொல்கிறோம். இது அணியின் ஆட்டங்களை பொறுத்து மாறுபடலாம்.

இந்திய கிரிக்கெட் அணி, இலங்கை தொடர் முடிந்ததும் உடனடியாக தென்ஆப்பிரிக்காவுக்கு சென்று டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அங்குள்ள ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானவை. எனவே அந்த தொடருக்கு தயாராவதற்காகவே கொல்கத்தா ஆடுகளமும் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கொல்கத்தா டெஸ்டில் முதல் நாள் ஆட்டத்திற்கு பிறகு இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் நிருபர்களிடம் கூறுகையில், ‘இது போன்ற ஆடுகளங்களில் (பிட்ச்) விளையாடுவது மகிழ்ச்சி தான். உண்மையிலேயே எளிதான சூழலில் ஆடுவதை நாங்கள் விரும்புவதில்லை. பெரும்பாலான வீரர்கள் இத்தகைய சவாலை சந்திப்பதில் ஆர்வமுடன் இருக்கிறார்கள்.

ஒரு அணியாக தொடர்ந்து முன்னேற்றம் காண விரும்புகிறோம். ஆனால் அடிக்கடி மழை குறுக்கிட்டதால் பேட்ஸ்மேன்கள் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் பாதிப்பு ஏற்பட்டது. இரு அணிகளும் ஏற்றுக்கொண்டதால் மின்னொளி பயன்படுத்தப்பட்டது. ஆனால் இத்தகைய சூழலில் சிவப்பு நிற பந்தை எதிர்கொள்வது மிகவும் கடினமாகும்’ என்றார்.

Editor:

This website uses cookies.