இந்தியா இறுதி போட்டிக்கு செல்லாததால், இறுதி போட்டிக்கான 30 ஆயிரம் டிக்கெட்டுகளை ரசிகர்கள் கேன்சல் செய்துள்ளனர். இதற்க்கு ஐசிசி நிர்வாகம் செய்வதறியாது திணறி வருகிறது.
2019ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பை தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. தொடர் முழுவதும் மற்ற எந்த அணிக்கும் இல்லாத அளவிற்கு இந்திய அணிக்காக ரசிகர்கள் ஏராளமானோர் மைதானத்திற்கு வந்து உற்சாகம் செய்தனர். அதற்க்கு ஏற்றாற்போலவே, இந்திய அணியும் லீக் போட்டியில் இங்கிலாந்து அணியை தவிர, மற்ற அனைத்து அணியையும் துவம்சம் செய்து புள்ளிபட்டியலில் முதலிடம் பிடித்து கம்பீரமாக அரையிறுதிக்கு நுழைந்தது.
இறுதிப்போட்டிக்கு நிச்சயம் இந்தியா தகுதி பெறும் என்று கணித்து ஏராளமான இந்தியர்கள் டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்திருந்தனர். ஆனால் மான்செஸ்டர் ஓல்ட் டிராஃபோர்ட மைதானத்தில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணி எதிர்பாராத விதமாக நியூஸிலாந்திடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் அதிர்ச்சி அடைந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், இறுதிப்போட்டிக்கு முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டுக்களை கேன்சல் செய்துள்ளதாக தெரிகிறது.
நேற்றிலிருந்து மட்டுமே சுமார் 30 ஆயிரம் டிக்கெட்டுக்கள் கேன்சல் ஆகியிருப்பதாகவும், இந்த எண்ணிக்கை வரும் ஞாயிறுக்குள் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. இருப்பினும், ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இங்கிலாந்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதால் கேன்சலான அனைத்து டிக்கெட்டுக்களும் உள்ளூர் ரசிகர்களால் விற்பனையாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம், இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் இறுதிப்போட்டி நடைபெறும் லண்டனுக்கு பயணம் செய்ய ஏராளமான இந்தியர்கள் விமான டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்திருந்தனர். தற்போது இந்த டிக்கெட்டுக்களும் திரும்ப பெறப்பட்டு வருகிறதாம். அதேபோல் போட்டிகளின் நடுவே விளம்பரப்படுத்த கொடுக்கப்பட்டிருந்த டிவி விளம்பரங்கள் சிலவும் ரத்து செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்தியா இறுதிப்போட்டிக்கு செல்லாததால், பல்வேறு விதங்களில் பொருளாதார நஷ்டங்கள் ஏற்பட்டு கொண்டிருப்பது தற்போது தெரிய வருகிறது.