காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து விலகுகிறார் ஏ.பி.டிவில்லியர்ஸ் ..!
தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஏ.பி.டிவில்லியர்ஸின் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியுடனான முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் தென் ஆப்ரிக்கா அணி வெற்றி தொடரை கைப்பற்றிய நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மட்டும் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெற்றது.
இதனை தொடர்ந்து இரு அணிகள் இடையேயான ஆறு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் வரும் பிப்ரவரி 1ம் தேதி துவங்க உள்ளது. அதனை தொடர்ந்து இரு அணிகள் இடையேயான மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது.
இந்நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணியின் அதிரடி ஆட்டக்காரரான டிவில்லியர்ஸின் விரலில் காயம் ஏற்பட்டது. தற்போது வரை காயத்தில் இருந்து டிவில்லியர்ஸ் முழுமையாக குணமடையாததால் இவர் குறைந்தது இரண்டு வார காலமாவது ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதன் காரணமாக டிவில்லியர்ஸ் இந்திய அணியுடனான முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் வாரியமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
டிவில்லியர்ஸ் விலகியிருப்பது நிச்சயம் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணிக்கு பெரும் பின்னடைவை கொடுக்கும் என்பதே நிதர்சனம்.
இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடர் வரும் பிப்ரவரி 1ம் தேதி துவங்க உள்ளது.