உங்களோட எதிரி இப்ப நாங்க தாண்டா… நெதர்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணிக்கு ஆப்பு வைத்த ஆஃப்கானிஸ்தான்
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 34வது போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியும், நெதர்லாந்து அணியும் மோதின.
லக்னோவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக சைபர்டண்ட் 58 ரன்களும், மேக்ஸ் 42 ரன்களும் எடுத்தனர்.
பந்துவீச்சில் ஆஃப்கானிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக முகமது நபி 3 விக்கெட்டுகளையும், நூர் முகமது 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்பின் 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மத் ஷா 52 ரன்களும், ஹஸ்மத்துல்லாஹ் ஷாகிதி 56 ரன்களும், ஒம்ரஜாய் 31 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 31.3 ஓவரிலேயே இலக்கை எட்டிய ஆஃப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நெதர்லாந்து அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி நடப்பு உலகக்கோப்பை தொடருக்கான புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனால் பாகிஸ்தான் அணி ஐந்தாவது இடத்தில் இருந்து ஆறாவது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது. அதே போல் நெதர்லாந்து அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் ஆஃப்கானிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பும் அதிகரித்துள்ளது. 52 சதவீதம் ஆஃப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பு உள்ளது, அதே வேளையில் பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு வெறும் 17 சதவீதமாக குறைந்துள்ளது. எஞ்சியுள்ள போட்டிகளின் முடிவே அரையிறுதி சுற்றுக்கான அணிகளை முடிவு செய்யும்.