அரையிறுதியில் அதிக ரன்களை குவித்த இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்பிரித் கவுருக்கு டிஎஸ்பியாக பதவி வழங்கி பஞ்சாப் அரசு கவுரவித்துள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்ற மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய அணி நூலிழையில் கோப்பையை தவறவிட்டது. இருப்பினும் இறுதிப்போட்டி வரை சென்று போராடிய மகளிர் அணியினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரை சென்ற மகளிர் கிரிக்கெட் அணியினருக்கு பிசிசிஐ ஏற்கனவே தலா 50 லட்சம் ரூபாய் பரிசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அறையிறுதிப் போட்டியில் அஸ்திரேலியாவுக்கு எதிராக அசத்திய ஹர்மன்பிரீத் கவுர்க்கு பஞ்சாப் அரசு பரிசுகளை அறிவித்துள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவை எதிர்க்கொண்டது. இதில் அதிரடி ஆட்டம் காண்பித்த ஹர்மன்பிரீத் 171 ரன்களை குவித்து ஆஸ்திரேலியாவை அலறவிட்டார்.
உலக சாதனை படைத்த ஹர்மன்பிரீத் :
மேலும் கடைசி வரை ஆட்டமிழக்காமலும் இருந்தார் ஹர்மன்பீரித் கவுர். இதன் மூலம் மகளிர் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீராங்கனை என்ற சாதனையும் படைத்தார் அவர்.
பஞ்சாப் மாநிலம் மோகா நகரைச் சேர்ந்த அவருக்கு அம்மாநில காவல்துறையில் டிஎஸ்பியாக பணி வழங்கியுள்ளது பஞ்சாப் அரசு. ஏற்கனவே ஹர்மன்பிரீத்துக்கு 5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும் பஞ்சாப் அரசு அறிவித்தது.
சிறுவயதில் இருந்தே போலீஸ் ஆக வேண்டும் என ஆசைப்பட்ட ஹர்மன் பிரீத்துக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஒன்றும் ஹர்பஜன் சிங் அல்ல, அவருக்கு இன்ஸ்பெக்டர் வேலைக்கூட வழங்கமுடியாது எனக்கூறி பதவி வழங்க மறுத்தது பஞ்சாப் காவல்துறை.
இதையடுத்து முன்னாள் கிரிக்கெட் வீரரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சச்சின் டெண்டுல்கரின் உதவியால் வெஸ்டர்ன் ரயில்வேயில் பணி பெற்றார் ஹர்மன் பிரீத். இந்நிலையில் உலகக்கோப்பை போட்டியில் சாதித்த ஹர்மன் பிரீத்துக்கு தானாக முன்வந்து டிஎஸ்பி பதவி வழங்கியுள்ளது பஞ்சாப் அரசு என்பது குறிப்பிடத்தக்கது.