உலகக்கோப்பை முக்கியம் தான். ஆனால் அதை விட எனக்கு முக்கியம் இதுதான் என ஜோ ரூட் கூறியுள்ளார்.
உலக கோப்பை தொடரில் உள்ளூர் நாடான இங்கிலாந்து ஒரு கட்டத்தில் அரையிறுதிக்கு முன்னேறுவதே கடினம் என்ற நிலை இருந்தது. ஆனால் கடைசி இரு லீக் போட்டிகளில் இந்தியா மற்றும் நியூசிலாந்து இரு அணிகளையும் வென்று அரையிறுதிக்கு மூன்றாவது அணியாக நுழைந்தது. அதன் பிறகு அரையிறுதியில் நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றது.
இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொண்டது, இரு அணிகளும் 241 ரன்கள் எடுத்ததால், ஆட்டம் சமனில் முடிந்தது. அதன் பிறகு வெற்றியாளரை தீர்மானிக்கும் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. அதிலும் ஆட்டம் சமனில் முடிவடைந்தால் அதிக பவுண்டரிகள் அடித்தவர்கள் வெற்றி என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி புதிய உலக சாம்பியனாக அறிவிக்கப்பட்டது.
கிரிக்கெட்டை கண்டுபிடித்த நாடாக இருந்தாலும், 44 வருட உலக கோப்பை வரலாற்றில் இங்கிலாந்து அணிக்கு இதுவே முதல் கோப்பை. அதனால் அணியின் வீரர்கள் அனைவரும் தங்களால் முடிந்த அளவிற்கு உச்சகட்ட கொண்டாட்டத்தை கொண்டாடித் தீர்த்தனர்.
கொண்டாட்டம் முடிவடைவதற்குள், டெஸ்ட் அணியின் கேப்டனான ஜோ ரூட் தனது அடுத்த இலக்கை நோக்கி நகரத் தொடங்கினார். ஆகஸ்ட் 1-ஆம் தேதி தொடங்கவிருக்கும் ஆஷஸ் போட்டியில் இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. பரம எதிரிகளான இவ்விரு அணிகளுக்கும் இடையே நடக்கும் போட்டி என்றால் ஒவ்வொரு பந்திலும் அனல் பறக்கும். இதனால் உலக கோப்பையை விட ஆஷஸ் போட்டியை வெல்வதே எங்களுக்கு மிக உயரிய இலக்காக இருக்கும் என ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “இந்த ஆண்டு எங்களுக்கான ஆண்டு. உலக கோப்பையை தட்டிச் சென்றது போல் ஆஷஸ் கோப்பையையும் வெல்வோம். இதற்காக ஒவ்வொரு வீரர்களும் முழுமூச்சுடன் போராட இருக்கின்றனர். உலக கோப்பையை வென்ற அதே உற்சாகத்துடன் ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் தொடர்களில் எதிர்கொள்வோம்” என்றார்.